"ஒருவேளை திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் நாங்கள் வெளியேறுவோம்".. உடைத்துப் பேசிய திருமாவளவன்
சென்னை: திமுக உடன் பாமக கூட்டணி அமைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
வரும் 2026 சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில், பாமக திமுக கூட்டணியில் இணையக்கூடும் என்ற தகவல்களும் பரபரக்கின்றன.

திருமாவளவன் பேட்டி
இந்தச் சூழலில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் பாமக தொடர்பாகவும், பாமக, திமுக கூட்டணியில் இணைந்தால் விசிகவின் நிலைப்பாடு குறித்தும் பேசியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
திருமாவளவன் பேசுகையில், "பாமக உடன் உறவை முறித்து கொண்டது, நாங்கள் ஆழமாகச் சிந்தித்து எடுத்த முடிவு. நாங்கள் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. பாமக வன்னியர்களையும், தங்களுக்கு சாதகமாக, கட்சியின் நலனுக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள். தலித்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அவர்கள் கையில் எடுத்தார்கள்.
பாமக பற்றி திருமா
முதலில் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது, தலித் மக்கள் பாதிக்கப்பட்டார்கள், குடிசைகளை கொளுத்தினார்கள். எத்தனையோ பிரச்சனைகள் நடந்தது. அது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நாம் எல்லாம் ஒற்றுமையாக இருப்போம் என ஒரு தாய் மக்கள் மாநாடு நடத்தினார். ஒரு தாய் மக்கள் மாநாடு நடத்திய, தலித் அல்லாத முதல் தலைவர் ராமதாஸ்.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, தலித் சமூகத்தை சேர்ந்தவர்களை கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்கினார்.
அம்பேத்கருக்கு சிலைகளை நிறுவினார். தலித் சமூகத்தை சேர்ந்தவர் தான் பாமகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஆக இருப்பார். முதல் முறையாக, இரண்டு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை அமைச்சர் ஆக்கினார் ராமதாஸ். இது எல்லாம் அந்த காலத்தில் இரண்டு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக அளப்பரிய முயற்சி. வரலாற்றில் என்றைக்கும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.
அதற்கு முன்னாள் நடந்த வன்முறையை விடுங்கள். அந்த வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய வேண்டிய ஒரு செயல்திட்டமாக இது எல்லாம் இருந்தது. அதன் பிறகு அதனை தொடர்ந்து செய்ய வேண்டுமா, இல்லையா? சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டுமா இல்லையா? நான் எப்படி உங்களுக்கு எதிரியாக இருக்க முடியும்? நான் எந்த இடத்தில் உங்களுக்கு எதிராக பேசி இருக்கிறேன்? எனக் கேள்வி எழுப்பினார்.
திமுக கூட்டணியில் பாமக இணைந்தால்
மேலும், திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால், திருமாவளவன் என்ன நினைத்து கொள்வார் என ராமதாஸுக்கு சங்கடம் இருப்பதாக பேசப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், "நான் யாருக்கும் இடையூறாக இருக்க மாட்டேன். நான் யாருக்கும் நெருக்கடி தர மாட்டேன். நிர்பந்தம் தரமாட்டேன். அது அவர்கள் எடுக்கிற முடிவுகள்.
திமுகவுக்கும் பாமகவுக்கும் இடையே அப்படி ஒரு நல்லிணக்கம் இருந்து, அப்படி ஒரு முடிவு எடுத்தால் நான் தலையிட மாட்டேன். நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம். நாங்கள் தனியாக நிற்போம். சும்மா வேட்பாளர்களை போடுவோம். பார்மாலிட்டி தேர்தலை சந்திப்போம்.
ஜெயிப்பது, தோற்பது பற்றி எங்களுக்கு பிரச்சனையே இல்லை. நாங்கள் எங்களது கொள்கை எதுவோ அதற்காகத் தான் களத்தில் நிற்கிறோம். இந்த தேர்தலில் நான்கு பேர் இருக்கிறோம். அடுத்த தேர்தலில் ஒன்றுமே இல்லை என்றாலும் நாங்கள் கவலைப்பட போவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications