திடீர் திருப்பம்.. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் வேதாந்தா நிறுவனம்!
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், அதனை வேதாந்தா நிறுவனம் விற்க முடிவு செய்துள்ளதாக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. அந்த ஆலையால் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு உடல்நிலை பாதிப்புகளை ஏற்படுவதாகத் தொடர்ந்து புகார் அளித்தனர்.
இருந்த போதிலும் ஆலை நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாகக் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி (எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றபோது) ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமும் நடைபெற்றது. அந்தச் சமயத்தில் போராட்டத்தைக் கலைப்பதாகக் கூறி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மூடல்
இதில் போராட்டத்தில் பங்கேற்ற 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தனர். இது மாநிலத்தை உலுக்கியது. அதன் பின்னரே ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட கடந்த 2018 மே 28ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பின்னர் ஆலை தொடர்ந்து மூடப்பட்டே உள்ளது. இடையில் கொரோனா காலத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே ஆலை 3 மாதங்கள் திறக்கப்பட்டது.

அனுமதி கோரி மனு
அதேநேரம் ஆலையைத் திறக்க வேதாந்தா நிறுவனம் தொடர்ச்சியாக முயற்சிகளை எடுத்து வந்தன. மீண்டும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி கடந்த 2020ஆம் ஆண்டு வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மனுவைச் சென்னை ஐகோர்ட் நிராகரித்தது. இது குறித்து உச்ச நீதிமன்றத்திலும் ஸ்டெர்லைட் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.

விற்க முடிவு
இந்தச் சூழலில் இந்தச் சூழலில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேதாந்தா நிறுவனம் விற்க முடிவு செய்துள்ளதாக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரம் முன்னணி நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆலையை வாங்க வாங்க விரும்புவோர் ஜூலை 4 மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பிரிவுகளும்
தாமிர உருக்கு வளாகம். தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை என வளாகத்தில் இருக்கும் 10 பிரிவுகளும் விற்பனைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள. அரசு உத்தரவைத் தொடர்ந்து ஆலை கடந்த சில ஆண்டுகளாகவே மூடப்பட்டுள்ள நிலையில், வேதாந்தா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications