வாகன ஓட்டிகளே.. உங்க வண்டியை உடனே தூக்குங்க.. சென்னை மேயர் பிரியா போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நாட்களாக சாலை ஓரத்தில் நிற்கும் வாகனங்கள் ஏலம் விடப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக சிலர் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதுபோன்ற வாகனங்களால் சென்னையில் அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி தரப்பிலும், போக்குவரத்து போலீசார் தரப்பிலும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நீண்ட நாட்காக நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை அகற்றி ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் புதன்கிழமை அன்று மேயர் பிரியா தலைமையில் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் லலிதா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அகற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா பேசுகையில், "சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவற்றை சென்னை போலீஸ் மற்றும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து அகற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. வாகனங்களை நீண்ட காலமாக நிறுத்தி வைத்துள்ள வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே மாநகராட்சி பகுதிகளில் ஆயிரத்து 38 வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்திட அறிவுறுத்தி உள்ளோம்.
அதன்பின்னரும், அப்புறப்படுத்தப்படாத வாகனங்களை செப்டம்பர் 1-ந்தேதி முதல் சென்னை மாநகர போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தி மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டு ஏலம் விட முடிவு செய்துள்ளோம்.
ஆகவே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கேட்பாரற்றுக் கிடக்கும் வாகனங்கள. சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையிலும் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும்." இவ்வாறு மேயர் பிரியா கூட்டத்தில் பேசினார்.












Click it and Unblock the Notifications