சென்னையே மாறுது.. வேளச்சேரி டூ மவுண்ட்டில் வருகிறது புதிய மாற்றங்கள்.. இன்னும் ஒரே மாசம்தான் இருக்கு
சென்னை: இன்னும் ஒரே மாதத்தில், வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான கடைசிகட்ட பணிகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயிலை, பரங்கிமலை வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டபோதே சென்னைவாசிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.. காரணம், வேளச்சேரியை பொறுத்தவரை, படுவேகமான வளர்ச்சியை எட்டிக் கொண்டிருக்கிறது. வேளச்சேரி உட்பட பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் முளைத்துவிட்டன..

இதனால், அடையாறு, திருவான்மியூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், பகுதி மக்கள் வேளச்சேரிக்கு தினமும் வந்து செல்லும் நிலைமை உள்ளது. அதேபோல, வேளச்சேரியிலிருந்து வடசென்னை, கோட்டை வரை தினமும் வந்து செல்ல வேண்டிய சூழலும் அப்பகுதி மக்களுக்கு உள்ளது. அதனால்தான், இந்த வேளச்சேரி - பரங்கிமலை திட்டத்தை பெரிதும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.
முட்டுக்கட்டை: ஆனால், 10 வருடத்துக்கு முன்பே இந்த பணிகள் நடந்து முடிந்திருக்க வேண்டிய நிலையில், திடீரென முட்டுக்கட்டை வந்துவிட்டது. 495 கோடியில் 2008லேயே இதற்கான பணிகளும் ஆரம்பமாயின..
ஆனால் திடீரென ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை ஏற்பட்டதால், இந்த பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டன. இந்த பணிகள் 2010ல் நிறைவடையாததால், திட்ட மதிப்பீடும் உயர்ந்தது. இறுதியில் கோர்ட் வரை விவகாரம் சென்றபிறகே தற்போது மீண்டும், அதாவது 15 வருடம் கழித்து பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் இருந்து பரங்கிமலையை இணைக்கும் வகையில் ஏற்கனவே தூண்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது, ராட்சத இரும்பு பாலம் அமைக்கும் பணிகளும் ஆரம்பமாகியிருக்கிறது.. 500 மீட்டர் தூரத்திற்கு, ராட்ச கட்டர்கள் பொருத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன..
இதுவரை 3 இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.. இன்னும் 3 இரும்பு தூண்கள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் முடியும் என்கிறார்கள்.. இதன்காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை அதாவது 3ம் தேதி வரை இரவு நேரத்தில் 9 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மிகுந்த மகிழ்ச்சி: இந்த பணிகள் எல்லாம் முடிவடைந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, கட்டுமானப் பணிகள் முடிந்ததும் தண்டவாளங்களை ஆய்வு செய்து, சேவைகளை இயக்க ஒப்புதல் அளிக்குமாறு தெற்கு கோட்டத்தின் (பெங்களூர்) ரெயில்வே பாதுகாப்பு ஆணையரிடகோரிக்கை வைக்கப்படும்.. அதற்கு பிறகே ஆய்வு முடிவடைந்து ரெயில் சேவை தொடங்கப்படும் என்கிறார்கள்.
வரப்பிரசாதம்: இந்த திட்டம் மட்டும் செயல்பாட்டிற்கு வந்தால், பணம் சேமிப்பு, விரைவான, பாதுகாப்பான பயணம் சென்னைவாசிகளுக்கு கிடைக்கும். மேலும், பறக்கும் ரயில், கடற்கரை-தாம்பரம் ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிகள், ரயில் மாறி பயணம் செய்வதற்கு பரங்கிமலை ரயில் நிலையம் ஒரு முக்கிய முனையமாக திகழும்.. அதுமட்டுமல்ல, பரங்கிமலையில் பறக்கும் ரயில் திட்டம் + மின்சார ரயில் திட்டம் + மெட்ரோ ரயில் என்று மும்முனை நிலையமாகவும் அமைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications