இன்னும் 3 மாதம் தான்.. வேளச்சேரி டூ பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை.. தெற்கு ரயில்வே சொன்ன குட் நியூஸ்
சென்னை: சென்னை வேளச்சேரி - பரங்கிமலைக்கு இன்னும் 3 மாதங்களில் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. தற்போது 80 சதவிகிதம் பணிகள் முடிந்துள்ளது என்றும், பரங்கிமலை ரயில் நிலையத்தில் பறக்கும் ரயில் பாலம் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயணிகள் பாதுகாப்பு, ரயில் நிலையம் புதுப்பிப்பு, புதிய ரயில் பாதை அமைக்கும் பணி என ரயில்வே பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் சென்னை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவை அமைக்கும் பணியினை ரயில்வே மேற்கொண்டு வந்தது.

வேளச்சேரி டூ பரங்கிமலை
கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ.495 கோடி மதிப்பீட்டில், சென்னை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை 5 கிமீ தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களினால் இந்த பணி முடிவதில் தாமதம் ஆனது. குறிப்பாக 2019 ஆம் ஆண்டே பயன்பாட்டு வர வேண்டியிருந்த இந்த ரயில் பாதை ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் ஆகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டது.
மொத்தம் உள்ள 5 கிமீ தூரத்திற்கு 4.5 கிமீ தூரம் 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது. எனினும் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடுத்ததால், தொடர்ந்து பணி நடைபெறாமல் இருந்தது. இதற்கு பிறகு தற்போது கோர்ட் அனுமதி கொடுத்ததையடுத்து பணிகள் தற்போது வேகமாக நடந்து வந்தது. இதில் ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் இடையே துண்கள் மீது அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென விழுந்ததாலும் இடையில் பணிகள் நிறுத்தப்பட்டன.
வரும் ஜூன் மாதம் முதல்
தற்போது பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதனால் எப்போது வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என்று பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் வரும் ஜூன் மாதத்தில் வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை அமைக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவை பணிகள் கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்து இருக்கிறது. ஆதம்பாக்கம் மற்றும் புழுதிவாக்கம் பகுதிகளில் மட்டும் ரயில் பாதை, சிகன்ல் அமைக்கும் பணி முழுமையாக முடிந்துள்ளது. ஆதம்பாக்கம் ஜீவாநகர் பகுதியில் உடைந்து விழுந்த பாலத்தின் தூண்கள் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது.
வரும் ஜூன் மாதம் முதல் வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். கூடிய சீக்கிரம் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்படும். இதனை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் இங்கு ஆய்வு செய்வார். இவ்வாறு அவர் கூறினார். பரங்கிமலையில் பறக்கும் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வந்தால், மின்சார ரயில், மெட்ரோ ரயில், பறக்கும் ரயில் என மும்முனை நிலையமாக பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துவிடும். இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications