வேலூரில் கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற நண்பர்கள்.. தமிழக - ஆந்திர எல்லையில் உடல் வீச்சு.. ஷாக்!
வேலூர்: வேலூரில் கல்லூரி மாணவனை சக நண்பர்களே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை, நண்பர்கள் அடித்துக்கொலை செய்து, அவரது உடலை தமிழக ஆந்திர எல்லையில் வீசிய நிலையில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பத்தியாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டேனி வளனரசு (19). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் ஆரணி அடுத்த தொந்திகரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் கண்ணன் (19), பாண்டிச்சேரியைச் சேர்ந்த பார்த்த சாரதி (19). இவர்கள், வேலூர் சாயிநாதபுரம் பொன்னி அம்மன் கோயில் தெருவில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர்.

இவர்களுடன், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இன்பா வர்மா என்ற முதலாம் ஆண்டு மாணவரும் தங்கி இருந்துள்ளார். கல்லூரிக்கு பருவத் தேர்வு விடுமுறை என்பதால் அனைவரும் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். கல்லூரி என்.சி.சி மாணவர்களுக்கான முகாம் தாம்பரத்தில் நேற்று தொடங்க இருந்ததால் அங்கு செல்வதற்காக டேனி கடந்த 1 ஆம் தேதி மாலை சாயிநாதபுரத்தில் உள்ள தங்கும் அறைக்கு வந்துள்ளார். அதன் பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் அவர் தொடர்புகொள்ளவில்லை.
டேனி வளனரசுவின் இரு சக்கர வாகனத்தை அவரது தந்தை ஆனந்த்திடம், கிஷோர் கண்ணன் நேற்று முன்தினம் பகல் 1 மணியளவில் கொடுத்துள்ளார். அப்போது, டேனி, இந்த வண்டியை உங்களிடம் கொடுக்கச் சொன்னதாக என்று மட்டும் கூறியுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த அவர் டேனியின் கைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டபோது 'ஸ்விட்ச் ஆப்' ஆகியிருந்தது. இதையடுத்து, கிஷோரிடம் மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால், சந்தேகம் அடைந்த ஆனந்த், தனது மகனின் வேறு சில நண்பர்களிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரித்துள்ளார். பின்னர், தனது மகனை காணவில்லை என வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் கிஷோர் கண்ணனிடம் விசாரித்தபோது, டேனியை, தானும், நண்பர் பார்த்தசாரதியும் சேர்ந்து கொலை செய்து உடலை தமிழக - ஆந்திர எல்லையில் வீசியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
பின்னர், கிஷோர் கண்ணன் கூறிய இடத்தில் வீசப்பட்டிருந்த டேனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான பார்த்தசாரதியை கைது செய்ய தனிப்படை போலீசார், அவரது சொந்த ஊரான புதுச்சேரிக்கு விரைந்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், டேனி வளனரசு, கிஷோர் கண்ணன், பார்த்தசாரதி மூவரும் நண்பர்கள். அதே வகுப்பில் படித்து வந்த மாணவி ஒருவருடன் ஏற்பட்ட காதல் விவகாரம் கடந்த ஒரு மாதமாக பெரியளவில் இவர்களுக்குள் பகை ஏற்பட்டுள்ளது.
கிஷோர் கண்ணன், பார்த்த சாரதி ஆகியோர் சேர்த்து டேனியை கொலை செய்ய ஒரு வாரம் முன்பே திட்டம் தீட்டியுள்ளனர். தற்போது, கல்லூரி விடுமுறை என்பதால் அவரது வீட்டுக்கே சென்று கொலை செய்யவும் முடிவு செய்துள்ளனர். அங்கு வீட்டில் டேனி இல்லாததால் சதித் திட்டத்தை கைவிட்டுள்ளனர்.
பின்னர், ஜனவரி 3 ஆம் தேதி என்சிசி கேம்ப் செல்ல வேண்டும் என்ற நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி இரவு சாயிநாதபுரத்தில் உள்ள அறைக்கு டேனி வந்திருப்பதை கிஷோரும், பார்த்தசாரதியும் தெரிந்துகொண்டனர். இருவரும் அறைக்கு சென்று அங்கிருந்த டேனியை பெல்டால் கழுத்தை இறுக்கியும், இரும்பு ராடால் தலையில் அடித்தும் கொலை செய்துள்ளனர். இரும்பு உளியால் குத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்த டேனியின் உடலை அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
டேனியின் தலைக்கு குல்லா, மப்ளர் போட்டு சுற்றியதுடன், குளிர்கால ஜாக்கெட்டை டேனிக்கு அணிவித்துள்ளனர். பின்னர், டேனியின் உடலை இரு சக்கர வாகனத்தின் நடுவில் உட்கார்ந்தபடி வைத்துக்கொண்டு கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியை கடந்து சித்தப்பாறை மலை அடிவாரத்தில் வீசிவிட்டு இருவரும் வேலூர் திரும்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலூரில் கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications