ஆம்பூரில் சாணி குவியலில் மின்னிய வெள்ளி! வேலூர் நகை வியாபாரியை விரட்டிய 1 கோடி! வாணியம்பாடி ட்விஸ்ட்
சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் அரங்கேறிய சினிமா பாணியிலான வெள்ளி நகை கொள்ளை சம்பவத்தில், துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் கொள்ளையர்களை கைது செய்து நகைகளை மீட்டுள்ளனர்.. ஆனாலும் அந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. என்ன நடந்தது வாணியம்பாடியில்?
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி தீபக் என்பவர், கடந்த 17ம் தேதி வாணியம்பாடி நகைக்கடை பஜாரில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக சுமார் 100 கிலோவிற்கும் அதிகமான வெள்ளி நகைகளை தனது காரில் கொண்டு வந்துள்ளார்..

வாணியம்பாடி வெள்ளி
அப்போது வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியில் உள்ள பாலாற்றுப் பாலம் அருகே காரை நிறுத்திவிட்டு தீபக் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்..
அந்த சமயத்தில் அங்கு திடீரென வந்த மர்ம நபர்கள், தீபக் மற்றும் அவரது கார் டிரைவர் உள்ளிட்டோரை அட்டை கத்தியைக் காட்டி மிரட்டி நிலைகுலையச் செய்துள்ளனர்.. கண் இமைக்கும் நேரத்தில் காரில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 38.50 கிலோ வெள்ளிப் பொருட்களை அந்த கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றது..
ஆம்பூர் தங்க நகைகள்
இந்த துணிகர கொள்ளை குறித்து தீபக் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. புகாரைப் பதிவு செய்த காவல்துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்..
முதற்கட்டமாக தீபக்கிடம் நகைகளை வாங்கிய கடை உரிமையாளர்கள் மற்றும் அவருடன் வந்த நபர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்..
மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும், சம்பவ நடந்த நேரத்தில் அப்பகுதியில் பதிவான செல்போன் எண்களின் சிக்னல்களையும் கொண்டு நுணுக்கமான ஆய்வுகளை மேற்கொண்டனர்.. இந்த ஆய்வில் வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்த பாபு என்பவரின் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது..
அதன்பேரில் பாபுவை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தபோது, இக்கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் இருந்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன..
நகை வியாபாரி - 1 கோடி
வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு நகைக்கடை உரிமையாளரின் மகனான நரசிம்மன் அமல்ராஜ் என்பவரே இக்கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.. இவர்களுடன் திருப்பத்தூர் அடுத்த குரும்பேரி பகுதியை சேர்ந்த மணி என்பவரும் இணைந்து இத்திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்..
இதனையடுத்து மணியின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளி நகைகளை அவர் மிகவும் சாதுர்யமாக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. தனது வீட்டின் பாத்ரூம் தொட்டி மற்றும் சாணி குவியலுக்குள் அவர் மறைத்து வைத்திருந்த 38.50 கிலோ வெள்ளி நகைகளை காவல்துறையினர் பத்திரமாக பறிமுதல் செய்தனர்..

100 கிலோ வெள்ளி
கைது செய்யப்பட்ட நபர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி நேரில் விசாரணை நடத்தினார்.. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றுமொரு நபரான சங்கர் என்பவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.. அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்..
வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, நகைகளை சாணிக் குவியலில் மறைத்து வைத்த இந்த வினோத கொள்ளை சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..












Click it and Unblock the Notifications