மாநில அரசுகளை 'டம்மியாக்க' சூழ்ச்சி... மத்திய அரசு மீது பாயும் வேல்முருகன்
சென்னை: நாட்டிலுள்ள அனைத்துப் பணிகளுக்குமே பொது நுழைவுத் தேர்வு என்பது மாநிலங்களை டம்மியாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்பதால் அதனை ஏற்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
TNPSC தேர்வுகளை அடியோடு ஒழிக்கப் போகிறது மத்திய அரசின் பொதுதேர்வு- வைகோ
அரசமைப்புச் சட்டம்
மோடி அரசு வந்ததிலிருந்து அரசமைப்புச் சட்டத்துக்கே வேட்டு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. மோடி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அதைத் தெளிவாக்குகிறது. அப்படி ஒரு நடவடிக்கைதான் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஒப்புதல் வழங்கிய "ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு" எனும் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கும் வங்கிப் பணிகளுக்கும் பொது நுழைத் தேர்வு ஆகும்.
மாநிலங்கள் பங்கு?
நாட்டிலுள்ள அனைத்துப் பணிகளுக்குமே பொது நுழைவுத் தேர்வு; அதை ஒன்றிய அரசே நடத்தும் என்பதில் மாநிலங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றாகிறது. அவ்வளவு ஏன், மாநிலங்களுக்கான அவசியமே இல்லை; எந்த வேலையுமில்லாத மாநிலங்களைப் பேசாமல் கலைத்துவிடலாம் என்பதுதான் இதிலிருந்து தெரியவரும் அல்லது இது சொல்லாமல் சொல்லும் செய்தி. இந்தச் செய்திக்கு வடிவம் கொடுக்க, நேரடியாக இல்லாமல் மறைமுகமாகச் செய்யும் முயற்சிதான் பொது நுழைவுத் தேர்வு என்பது.
வேல்முருகன் வேதனை
கல்வியைச் சந்தைமயமாக்குவதன் மூலம், அந்தச் சந்தையில் பொது நுழைவுத் தேர்வே விலையேறப் பெற்ற பொருளாகிவிடும்; அதனால் அதற்கு வகைதொகையற்ற பணத்தைக் கொட்டியழ வேண்டும். கல்வி அங்கே இரண்டாம் பட்சம், மூன்றாம் பட்சம் அல்ல; அர்த்தமற்ற பொருளாகவே ஆகிவிடும். என்றைக்கு "நீட்" வந்ததோ அன்றே இந்தக் கல்விச் சந்தையும் களைகட்டிவிட்டது.
தன்னாட்சி பெறுக
மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கும் வங்கிப் பணிகளுக்கும் இனி ஒன்றிய அரசின் பொது நுழைத் தேர்வாம்! பல்வேறு மொழி வழி தேசிய இன நாடுகளின் (மாநிலங்கள்) ஒன்றியத்தில் போய் ‘ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு' என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது! இதற்கு நிலையான தீர்வாக, மாநிலங்கள் தன்னாட்சி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!