வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தால் இவ்வளவு பிரச்சனைகள் வரும்... லிஸ்ட் போடும் வேல்முருகன்..!
சென்னை: வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
பழங்குடி மக்கள், வனவாழ் ஆதிவாசி மக்களுக்கு எதிரான, காட்டுயிர்களுக்கு எதிரான, காடுகளை அழிக்கும் வகையில் இந்தச் சட்டத்திருத்தம் உள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சட்டத்திருத்தம்
கடந்த அக். 4-ம் தேதி, இந்தியாவில் 1980-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகள் அடங்கிய ஆவணத்தை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதன்மீது கருத்துக்களை தெரிவிக்க 15 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தில் முன்மொழிந்துள்ள திருத்தம், வன நிலங்களை எவ்வித கேள்வியும் இன்றி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடு வகுக்கப்பட்டுள்ளது.

தாரை வார்க்க
அதாவது, வன நிலங்கள் பற்றிய வரையறையை உருவாக்கும் உரிமையை மாநில அரசுகளிடம் பறித்து, வனங்கள் தொடர்பான மறு வரையறை செய்யப்பட்ட அறிவிக்கைகளை வெளியிடும் அதிகாரத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், வன நிலங்களை, வன மல்லாதவை என்று மாற்றி சொற்ப விலையில், எளிதாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான சட்ட திருத்தத்தை கொண்டு வர ஒன்றிய அரசு முயலுகிறது.

வனவாழ் ஆதிவாசிகள்
ஒன்றிய அரசின் இந்த சட்டத்திருத்தம், புதிய சாலைகளும், ரயில்வே பாதைகளும் காப்புக் காடுகளில் அமைக்க வழிவகுக்கும். இதன் காரணமாக, வனப்பகுதிகள் சிறு சிறு துண்டுகளாக மாறும். காட்டுயிர்கள் வாழ்விடங்கள் சுருங்கும். மனித - விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரிக்கும்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் வணிக நோக்கில், காட்டு மரங்கள் வெட்டப்படும். மேலும், 2006 ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தை கடுமையாக பாதிப்பதோடு, பழங்குடி மக்கள், வனவாழ் ஆதிவாசி மக்கள் ஆகியோரை வனப்பகுதியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றும்.

ஐ.நா. அறிவுறுத்தல்
குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக வெறிக்காக காடுகளை இரையாக்கும் நடவடிக்கை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
2021 தொடங்கி அடுத்த பத்தாண்டுகளை கால நிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய அத்தனை மாற்றங்களையும் செய்வதற்கான பத்தாண்டாக ஐ.நா அறிவித்துள்ளது.

கண்டனம்
இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக, 1980-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகள் அடங்கிய ஆவணத்தை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கையை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.












Click it and Unblock the Notifications