முகவரி கூட படிக்கத் தெரியாதவர்களுக்கு தமிழகத்தில் என்ன வேலை? அஞ்சல்துறையை கண்டிக்கும் வேல்முருகன்!
சென்னை: தமிழ்நாட்டில் அஞ்சல்துறையில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ள 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழர்கள் என்றும் தமிழில் முகவரி கூட படிக்கத் தெரியாத வடமாநிலத்தவர்கள் எப்படி இங்கு மக்கள் சேவையாற்ற முடியும் எனவும் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் அஞ்சல்துறையில் பணியாற்ற வெளியிடப்பட்டுள்ள பட்டியலை திரும்ப பெற ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியிருப்பதாவது;

அஞ்சல் துறை
இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாட்டில் அஞ்சல் உதவியாளர்களாக, தபால் பிரிப்பு உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் 10.02.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியலில் இடம் பெற்றவர்களில் 946 பேரில், 46 பேர்கள் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. வடமாநிலத்தை சேர்ந்த பெரும்பாலோனோர் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதில், கல்பித், பவார், சிபு, அனூப், சாகா, மண்டல், சிங், லங்கா, பூனம், நீட்டு, மிஸ்ரா, பண்டிட், கௌரவ், சிபு, மித்ரா, குப்தா என்று பட்டியல் நீளுகிறது.

வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 70 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு, வேலைக்காக காத்திருக்கும் சூழலில், இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாட்டில் அஞ்சல் உதவியாளர்களாக, தபால் பிரிப்பு உதவியாளர்களாக பணியாற்றுவதற்கு, தமிழ்நாட்டை சேர்ந்த 46 பேர் மட்டுமே தேர்ந்தெடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

மண்ணின் மக்கள்
பணிக்காக தேர்வு செய்யப்பட்ட வடமாநிலத்தவர்களுக்கு, முகவரி கூட படிக்க தெரியாது. அவர்கள் எப்படி தமிழ்நாட்டில் மக்கள் சேவை செய்யப்போகிறார்கள் எனக்கேட்டால் பதிலிருக்காது. எனவே, தமிழ்நாட்டில் அஞ்சல்துறையில் பணியாற்ற வெளியிடப்பட்டுள்ள பட்டியலை திரும்ப பெற ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வை நடத்தி, மண்ணின் மக்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அழுத்தம் தருக
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறைக்கான பணியிடங்களுக்கான தேர்வை, மாநில அளவிலேயே நடத்தவும், இட ஒதுக்கீடு நடைமுறையை பின்பற்றவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். முக்கியமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை கட்டாயப்படுத்தி உள்ள தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசு அலுவலகங்களின் பணியிடங்களுக்கு, தமிழ்நாட்டின் தமிழருக்கே முன்னுரிமை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.












Click it and Unblock the Notifications