சிமெண்ட் -செங்கல் -இரும்பு கம்பி விலை கிடுகிடு! கட்டுமான தொழில் கடும் பாதிப்பு! வேல்முருகன் வேதனை!
சென்னை: கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.410 இருந்து ரூ.450 ஆகவும், ஒரு செங்கல் விலை ரூ.9.50 லிருந்து ரூ.11.50 ஆகவும், உயர்ந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கடனால் அவதி
கொரோனா முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள், தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்கி தங்களின் வாழ்வாதாரத்தை ஓட்டினர். ஊரடங்கு திரும்ப பெறப்பட்டு ஒராண்டிற்கு மேலானாலும், தொழிலாளர்கள் பெரும்பாலோனோர், தாங்கள் வாங்கிய கடனை இன்னும் முழுமையாக திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

கட்டுமானப் பொருட்கள்
இச்சூழலில், கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொழிலாளர்கள் வேலை இழந்து மீண்டும் வீட்டிலேயே முடங்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்து மாதங்களாக இரும்பு கம்பிகளின் விலை 30 முதல் 42 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. அவற்றின் ஒரு டன் விலை ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

விலை கிடுகிடு
அதே போன்று, ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.410 இருந்து ரூ.450 ஆகவும், ஒரு செங்கல் விலை ரூ.9.50 லிருந்து ரூ.11.50 ஆகவும், உயர்ந்துள்ளது. எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, சென்னை, கோவை போன்ற பெரும் நகரங்களில், 2019-ல் , ரூ.25 லட்சத்துக்கு விற்கப்பட்ட வீடுகள், தற்போது ரூ.30 லிருந்து ரூ.35 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் மோதல் காரணமாக இரும்பு கம்பிகளின் விலை உயர்ந்துள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன.

தொழில் முடங்கும்
இந்த கட்டுமான பொருட்களின் விலை உயர்வு கட்டுமானத்துறையை பெரிதும் பாதித்துள்ளது. விலை உயர்வு காரணமாக சிறு கட்டுமான நிறுவனங்கள் தங்களது பணியை தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றன. அதுமட்டுமின்றி, கட்டுமான தொழிலை நம்பி தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். தொழில் முடங்கினால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

அரசுகளுக்கு கோரிக்கை
எனவே கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசு விரைந்து செயல்பட வேண்டும். இரும்பு கம்பிகள் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த, சிமெண்ட் உற்பத்தியை அதிகரித்து நியாயமான விலையில் அரசே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.












Click it and Unblock the Notifications