விஜய் என் பிள்ளைகளுக்கு தாய்மாமன் உறவு! ஒத்த சீட்டுக்கு அலையும் தற்குறி.. வேல்முருகனை விளாசிய பெண்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் 10 மற்றும் 11ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக நேரில் வரவழைத்து பரிசு வழங்கி வருகிறார். இந்த நிலையில் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சித்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கிடையே இன்று விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய பெண் ஒருவர் என் குழந்தைகளுக்கும் விஜய்க்கும் இருப்பது தாய்மாமன் உறவு என்றும் எனக்கு இல்லாத உரிமை கூட விஜய்க்கு இருக்கிறது என பேசி இருக்கிறார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சட்டமன்றத் தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார்.
தனது சொந்த செலவில் அவர்களை நேரில் வரவழைத்து விருந்து வைத்து, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களை மாமல்லபுரம் வரவழைத்த விஜய் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இந்த நிலையில் இதுகுறித்து விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இரண்டு கிராம் தங்கத்துக்காக ஒரு கூத்தாடியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வைக்கின்றனர். இது தமிழனுக்கு அழகா. ஈனப்பிறவிகள்.. என பேசி இருந்தார். வேல்முருகனின் இந்த பேச்சுக்கு தமிழக வெற்றிக்கழகத்தினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் தான் பேசியது சரிதான் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறி இருக்கிறார் வேல்முருகன். இந்த நிலையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை இறுதி கட்டமாக இன்று மாமல்லபுரத்தில் விஜய் சந்தித்து சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார். குறிப்பாக ஜேஇஇ தேர்வில் அகிலா இந்திய அளவில் 417 வது இடத்தில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது பேசிய ஒரு மாணவியின் தாய் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனை விமர்சித்து பேசினார். "ஒத்த சீட்டுக்காக அலையும் சிலர் விஜயின் மாணவர்கள் சந்திப்பை குறித்து பேசக் கூடாது.
விஜய் என் பிள்ளைகளுக்கு தாய் மாமன் போல தாய்க்கு இல்லாத உரிமை கூட தாய் மாமனுக்கு இருக்கிறது. சிலர் தற்குறித் தனமாக பேசி வருகின்றனர். அதை எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது" என பேசி உள்ளார். தற்போது இந்த வீடியோவை தமிழக வெற்றிக் கழகத்தினர், தவாக தலைவர் வேல்முருகனை டேக் செய்து சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிர்ந்து வருகின்றனர்.











Click it and Unblock the Notifications