TNPSC நடத்தும் பொறியியல் பணியிடங்களுக்கான தேர்வை ஒத்தி வைக்கணும்! காரணத்துடன் வேல்முருகன் வேண்டுகோள்
சென்னை: TNPSC நடத்தும் பொறியியல் பணியிடங்களுக்கான தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;
''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை தமிழ்நாடு அரசு ஒத்தி வைக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள், முக்கிய அரசு ஆவணங்கள், அடையாள அட்டைகள், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றையும் இழந்து தவித்து வருகின்றனர். இத்தகைய நெருக்கடி சூழலில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையமானது அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள 369 பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை ஒத்திவைக்காமல், அறிவித்தப்படியே, ஜனவரி 6 ஆம் தேதியே நடத்த முடிவெடுத்துள்ளது. இது, தேர்வர்களிடையே பெரும் பதற்றத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மழை வெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு பல்வேறு அரசுப் பணித்தேர்வுகள் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டது போன்று, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஜனவரி 6,7 அன்று நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வையும் ஒத்தி வைக்க, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.''












Click it and Unblock the Notifications