Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேங்கைவயல் பிரச்சனைக்கு சாதிய மோதல் காரணமே இல்லை.. ஐகோர்ட் கிளையில் அரசு வழக்கறிஞர் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேங்கைவயல் விவகாரத்திற்கு தனி மனித பிரச்சனையே காரணம்; சாதி மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் கிடையாது என வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

வேங்கைவயல் வழக்கில் அறிவியல்பூர்வ சோதனைக்குப் பின்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சன் முகமது ஜின்னா தெரிவித்துள்ளார்.

vengaivayal high court

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்தச் சம்பவத்தில் மூன்று நபர்கள் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டதோடு அவர்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களும் வெளியாகி இருந்தது.

இந்த குற்றப் பத்திரிக்கை பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. பாதிக்கப்பட்ட தரப்பினரையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதாக ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பலரும், இதில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அதேநேரம் வேங்கை வயலில் நடந்த மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் சாதிய மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. எனவே இது குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதற்கிடையே, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலைத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் உடனடியாக கைது நடவடிக்கை வேண்டும். வேங்கைவயல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டார். அப்போது, "வேங்கை வயல் விவகாரம் குறித்த முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேங்கை வயலில் சாதிய மோதலோ அரசியல் காழ்புணர்ச்சியோ கிடையாது. இருவருக்குள் ஏற்பட்ட தனிமனித பிரச்சனை தான் காரணம்.

இரண்டு வருடங்களாக சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். வழக்கில் அறிவியல் பூர்வ சோதனைக்கு பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வெளியான வீடியோ, ஆடியோக்கள் உண்மை. இதில் மூன்று நபர்கள் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மொத்தம் 389 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 196 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இருந்த படங்கள், வீடியோக்கள், உரையாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. சுற்று வட்டாரப்பகுதியில் 87 டவர் லொகேஷனில் ஆய்வு செய்து புள்ளி விவரம் எடுக்கப்பட்டது. குரல் மாதிரி, புகைப்படங்கள் வீடியோக்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றின் மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது." என வாதத்தை வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு (ஜனவரி 29) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞரே ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதால் நாளை விசாரணை தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+