ஸ்தம்பித்த தமிழ்நாடு.. ஒரேயடியாக சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்
சென்னை: நீண்ட விடுமுறை முடிந்து பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சென்னைக்கு திரும்புவதால் பல்வேறு இடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டு இந்த வாரம் திங்கள்கிழமை வந்ததால் அது நீண்ட வார இறுதியாக அமைந்துவிட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமை உடன் புத்தாண்டு தினமான திங்களும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல தமிழ்நாடு முழுக்க இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.. இதனால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி புத்தாண்டை வரவேற்றனர்.
போக்குவரத்து நெரிசல்: இந்த நீண்ட விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும். இதன் காரணமாகப் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்குத் திரும்பி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒரே நேரத்தில் பொதுமக்கள் சென்னைக்குத் திரும்புவதால் சென்னைக்கு வரும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாகச் செங்கல்பட்டு அடுத்துள்ள சிங்கபெருமாள் கோயில் அருகே சுமார் 3 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதனால் மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்லும் நிலையே இருக்கிறது.
கிழக்கு கடற்கரைச் சாலை: அதேபோல கிழக்கு கடற்கரைச் சாலையிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துவிட்டு பொதுமக்கள் வீடு திரும்புவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையை நோக்கி வரும் சாலைகள் மட்டுமின்றி நகரிலும் இதே நிலை தான். குறிப்பாகச் சென்னை மெரினா பீச்சில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகப் பொதுமக்கள் வந்த நிலையில், காமராஜர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் காமராஜர் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன. நள்ளிரவு வரையிலும் கூட காமராஜர் சாலையில் இதே நிலைதான் நீட்டித்தது. நாளை காலை சென்னை புறநகரில் ஒரே நேரத்தில் மக்கள் குவிவார்கள் என்பதால் அங்கே மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று தெரிகிறது.
சென்னை மட்டுமின்றி பல முக்கிய மாவட்டங்களிலும் டிராபிக் நெரிசல் இருக்கிறது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதிகளில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறது.












Click it and Unblock the Notifications