ஏசியில் ஓசி காத்து வாங்கக் கூட ஆள் வரவில்லை.. ஷாப்பிங் மால் ஓனர்கள் கவலை
சென்னை: கொரோனாவுக்கு பிறகு ஷாப்பிங் மால்கள் திறந்து 6 நாட்கள் ஆன நிலையில் மக்கள் கூட்டம் இல்லை என மால் நிர்வாகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
Recommended Video
தியேட்டர், கேம்கள், ஹோட்டல்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள், மளிகை கடை ஸ்பா, ப்யூட்டி பார்லர், பப், வெளிநாட்டு மதுபான விற்பனையகம் என அனைத்து கடைகளும் ஒரே இடத்தில் இருப்பதற்கு ஷாப்பிங் மால் என பெயர்.
இந்த மால்களின் கலாச்சாரம் சென்னை உள்ளிட்ட நகரங்கள், மெட்ரோ நகரங்களில் வளர்ந்து வருகின்றன. இதனால் வேகாத வெயிலிலும் கொட்டும் மழையிலும், கடுங் குளிரிலும், கூட்ட நெரிசலுக்கு மத்தியில் தி நகர் ரங்கநாதன் தெருவில் ஷாப்பிங் செய்து வந்தவர்கள் தற்போது மால் பக்கம் திரும்பி வந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல.. பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி.. கிடுக்கிப்பிடி உத்தரவு
குழந்தைகள்
காதல் ஜோடிகள், நண்பர்கள், நண்பிகள், குழந்தைகள், பெரியவர்கள் என பலதரப்பட்ட மக்களும் வந்து செல்கிறார்கள். வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்கள், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் பெரிய மால்கள் என்றால் லட்சக்கணக்கான மக்களும் சிறிய மால்கள் என்ற ஆயிரக்கணக்கான மக்களும் வந்து செல்வது வழக்கம்.
மால்களில் கூட்டம்
இதெல்லாம் எப்போது தெரியுமா கொரோனாவுக்கு முன்னர்! மாதத்தில் ஒருநாளாவது மால்களுக்கு செல்லாவிட்டால் அவமானம் என கருதும் அளவுக்கு அந்த கலாசாரத்தில் மக்கள் லயித்து கிடந்தனர். இதில் என்ன விசேஷம் என்றால் கோடை காலத்தில் மால்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மால்கள் மூடல்
வார இறுதி நாட்கள், ஃப்ரீயாக இருக்கும் தினங்களில் நண்பர்களுடன் இந்த மால்களுக்கு வந்து பொருட்கள் வாங்காவிட்டாலும் ஏசி காற்றை வாங்கவாவது ஒரு பெருங்கூட்டம் இங்கு வந்து கொண்டிருந்தது. ஆனால் கொரோனா வந்தாலும் வந்தது, கடந்த மார்ச் மாதம் முதல் மால்கள் மூடப்பட்டிருந்தன.
மால்கள் திறப்பு
இந்த நிலையில் 5 மாதங்கள் கழித்து தற்போது மால்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் மால் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மால்களை திறக்க அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருந்தது. சில மால்களில் செப்டம்பர் 1ஆம் தேதி செவ்வாய்க்கிழமை என்பதால் சென்டிமென்ட் காரணமாக 2-ஆம் தேதியான புதன்கிழமை திறக்கப்பட்டன.
சமூக இடைவெளி
தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பார்த்தல், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் மக்கள் தொடும் இடங்கள் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டன. இவை அனைத்தும் மால்களில் செய்யப்பட்டன.
மால்களுக்கு வருவோர்
ஆனால் கொரோனா பீதி காரணமாக மால்களுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறுகிறார்கள். பேச்லர்களாக தங்கியிருப்பவர்கள் உள்பட வெகு சிலரே மால்களுக்கு வருகிறார்களாம். இதற்கு காரணமாக சொல்லப்படுவது, குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் வார இறுதி நாட்களில் மால்களுக்கு அழைத்து செல்லப்படுவர்.
65 வயது பெரியவர்கள்
ஆனால் தற்போது 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வேகமாக பரவி வருவதாலும் ஒரு சில மால்களில் உள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவியதாலும் மால்களுக்கு வரும் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.
மால்கள்
இன்னொரு நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் இயங்கும் இடங்களுக்கு பொதுவாக முதல் சில நாட்களில் குவிவதை பொதுமக்கள் விரும்பமாட்டார்கள். அதிலும் கொரோனா தொற்று என்பதால் கேட்கவே வேண்டாம். இதுகுறித்து மால் நிர்வாகத்தினர் சிலரிடம் கேட்ட போது அரசு கூறிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுதான் வருகிறோம். எனவே பொதுமக்கள் அச்சமின்றி மால்களுக்கு வரலாம். இத்தனை நாட்கள் வார நாட்கள் என்பதால் கூட்டம் குறைவாக இருந்திருக்கலாம் என நினைத்தோம். ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே மால்களுக்கு வந்துள்ளனர்.
கோரிக்கை
மால்களில் கடை வைத்துள்ளவர்கள், கடையில் பணிபுரிவோர், பாதுகாப்பு அதிகாரிகள், செக்யூரிட்டி, நிர்வாகம், மெயின்டெனன்ஸ், பிளம்பிங் உள்ளிட்டோருக்கு ஊதியம் கொடுப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. மால்களுக்கு மாநகராட்சிகள் வசூலிக்கும் சொத்து வரி உள்ளிட்ட வரிகளில் ஏதேனும் சலுகை கிடைத்தால் நன்றாக இருக்கும். மேலும் சினிமா தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி கொடுத்தால் அதுவும் எங்கள் பிரச்சினைக்கு அருமருந்தாக இருக்கும் என்றார்கள். இவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா என்பது போக போகத்தான் தெரியும்.