பிரபல நடிகை லீலாவதி காலமானார்.. பெங்களூரில் பிரிந்த உயிர்.. பெரும் சோகம்.. யார் இவர் தெரியுமா?
சென்னை: பழம்பெரும் நடிகை லீலாவதி பெங்களூரில் இன்று காலமானார். தமிழில் எம்ஜிஆர், சிவாஜி உள்பட பலருடன் நடித்த இவர் வயது முதிர்வு காரணமாக பெங்களூரில் இன்று காலமானார்.
தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை லீலாவதி. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். தட்சிண கன்னட மாவட்டம் பெல்தங்கடியில் பிறந்த இவர் 16 வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட பல மொழி படங்களில் நடித்து வந்தார். தமிழில் ‛பட்டினத்தார்', ‛வளர்பிறை', ‛அவள் ஒரு தொடர்கதை', ‛அவர்கள்', ‛நான் அவன் இல்லை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கன்னட சினிமாவில் அங்கு சூப்பர் ஸ்டாராக விளங்கிய மறைந்த நடிகர் ராஜ்குமாருடனும், தெலுங்கு சினிமாவில் நடிகர் என்டிஆருடனும் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் மட்டும் 400 படங்கள் வரை நடித்துள்ளார். இந்நிலையில் தான் லீலாவதி தற்போது பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களாவில் வசித்து வந்தார். அவருக்கு வயது 85.
இவர் தனது மகனும், நடிகருமான வினோத் ராஜ்யுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தான் வயது முதிர்வு காரணமாக அவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். வீட்டில் வந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தான் இன்று அவருக்கு திடீரென்று லோ பிபி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். நடிகை லீலாவதியின் மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்பட திரையுலக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications