நல்லகண்ணு கீழே விழுந்து தலையில் காயம்.. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெங்கடேஸ்வரா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தலையில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மற்ற பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தமிழக அரசியல் வரலாற்றில் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு 100 வயதாகிறது. போராட்டங்களிலேயே நெடுங்காலத்தைக் கழித்த கொள்கைப் பிடிப்பு மிக்க அரசியல் தலைவர் நல்லகண்ணு. மக்கள் போராட்டங்களுக்குப் பெயர் பெற்றவர்.
இந்நிலையில், மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவுக்கு, 2 நாட்களுக்கு முன்பு கீழே தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெங்கடேஸ்வரா மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமாகிய இரா நல்லகண்ணு நேற்று முன் தினம் (22 ஆகஸ்ட் 2025) வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக சென்னை, நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழக்கப்பட்டு வருகின்றன. மேலும், நூறு வயது தாண்டிய நிலையில் வயது முப்பின் காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க, நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபணர், இருதய நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக தற்போது, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications