விஜிபி பொழுதுபோக்கு பூங்கா பிரச்சினை.. நீலாங்கரை போலீஸ் விசாரணையில் நிர்வாகத்தினர்
சென்னை: சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி பொழுது போக்கு பூங்காவைத் திறக்க தற்காலிக தடை விதித்து நீலாங்கரை போலீஸார் நோட்டீஸ் அளித்திருந்தனர். பூங்கா பராமரிப்பு ஆவணங்களுடன் காவல் நிலையத்தில் ஆஜாராக வேண்டும் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், விஜிபி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது விஜிபி பொழுதுபோக்கு பூங்கா. இங்கு விடுமுறைக் காலங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, விஜிபியில் அசையாமல், கண் சிமிட்டாமல் நிற்கும் மனிதனைப் பார்ப்பதற்காகவும், அவரிடம் புகைப்படம் எடுப்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதுமட்டுமல்லாமல் அதிக அளவிலான விளையாட்டுகளும், சாகச விளையாட்டுகளும் இங்குள்ளன.

விடுமுறை என்பதால் நேற்றும் ஏராளமானோர் விஜிபி பூங்காவுக்கு வந்து ரைடுகளில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, மாலை 6 மணியளவில் அங்கிருந்த டாப் கன் எனும் ராட்சத ராட்டினத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 36 பேர் அதில் ஏறியுள்ளனர். அப்போது, பல்டி அடிக்கும் அந்த ரைடு ஒருமுறை சுற்றியுள்ளது. அடுத்த முறை சுற்றுவதற்கு முன்பே அந்தரத்தில் சுமார் 50 அடி உயரத்தில் ராட்டினத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அப்படியே நின்றது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் அலறத் தொடங்கினர்.
விஜிபி நிர்வாகனத்தினர் கிரேன் மூலம் சுற்றுலாப் பயணிகளை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், உயரம் குறைவாக இருந்ததால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 3 மணி நேரமாக பயணிகள் அந்தரத்திலேயே தவித்துக் கொண்டிருந்தனர். இரவு 10.30 மணியளவில் தான் தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் சுற்றுலாப் பயணிகளை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து விஜிபி நிர்வாகத்தினர் போலீஸாருக்கு தமாதமாக தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜிபி பூங்காவை திறக்க தற்காலிக தடை விதித்து நீலாங்கரை போலீஸார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
பூங்காவில் உள்ள ரைடுகளுக்கான அனுமதி தொடர்பான ஆவணங்கள், பழுது ஏற்பட்டதற்கான காரணம், போலீஸுக்கு தாமதமாக தகவல் கொடுத்தது ஏன், சுற்றுலாப் பயணிகளை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும் என்று கோரி பூங்காவின் பொது மேலாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, விஜிபி நிர்வாகத்தின் பொது மேலாளர் பாலா உள்ளிட்ட 5 பேர் நீலாங்கரை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பிரவீண் ராஜேஷ் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
அனைத்து ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பித்தாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த ஆவணங்களை சட்ட வல்லுநர்களை வைத்து சரிபார்க்கப்படும் என்றும், அதற்குப் பிறகே பொழுதுபோக்கு பூங்காவை திறக்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்காலிகமாக விஜிபி பொழுதுபோக்கு மூடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications