ஆழிப்பேரலை ஊழித்தாண்டவமாடிய 15-ம் ஆண்டு நினைவு நாள்... உறவுகள் கண்ணீர் அஞ்சலி
சென்னை: தமிழகத்தின் கடலோர பகுதிகளை உருத்தெரியாமல் புரட்டிப் போட்ட ஆழிப்பேரலை ஊழித்தாண்டவமாடிய 15-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆழிப்பேரலை வாரி சுருட்டிச் சென்றதில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரின் உறவினர்கள் இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி தமிழகம் மிகப் பெரிய ஆழிப்பேரலை தாக்கத்தை எதிர்கொண்டது. இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுகத்தால் இந்த ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி அலைகள் ஏற்பட்டன.
மெரினா கடற்கரை
சென்னை முதல் கன்னியாகுமரி வரை அத்தனை கடலோர கிராமங்களிலும் ருத்ரதாண்டவமாடிவிட்டுப் போனது இந்த சுனாமிப் பேரலை. சென்னை மெரினா கடற்கரையில் அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள், அயர்ந்து உறங்கிய மீனவர்கள், சிறுகடை வியாபாரிகள் என நூற்றுக்கணக்கானோரை ஆழிப்பேரலை அள்ளிச் சென்றது.
வேளாங்கண்ணி
சென்னையைத் தொடர்ந்து மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டது நாகை வேளாங்கண்ணி. கடற்கரை மணற்பரப்பு முழுவதும் கொத்து கொத்தாக ஆழிப்பேரலை விழுங்கி மீந்த சடலங்கள் சிதறிக் கிடந்தன.
610 பேர் பலி
இதேபோல் கடலூர், புதுவை என பல கடலோர பகுதிகள் கண்ணீரில் தத்தளித்தன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 610 பேர் பலியாகினர்.
குமரி மேலக்குடி
கன்னியாகுமரியின் மேலக்குடியில் ஒரே கிராமத்தில் 116 பேரை சுனாமி பேரலை சுருட்டிக் கொண்டு போனது. தமிழகத்தின் ஒவ்வொரு கடலோர கிராமத்துக்கும் ஆழிப்பேரலையின் வடுக்கள் இன்னமும் இருக்கின்றன.
கடலுக்குள் பால், மலர் தூவி வழிபாடு
ஆழிப்பேரலை தாக்கிய 15-ம் ஆண்டு நினைவு நாளான இன்று உறவினர்கள் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர். கடலுக்குள் பாலை ஊற்றி பூக்களை தூவி வழிபாடு நடத்தினர்.
இரங்கல் வழிபாடுகள்
சுனாமி நினைவு தூண் அமைக்கப்பட்ட இடங்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த துயரநாளை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. பல இடங்களில் மீன் சந்தைகள் மூடப்பட்டன.