"வாடிய முகம், லேசான தாடி!" செந்தில் பாலாஜியின் 2 பக்கமும் காவலர்கள்! சென்னை சாஸ்திரி பவனில் பரபர
சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாகப் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று அமலாக்கத் துறை காவலில் எடுத்துள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, போக்குவரத்து துறையின் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கி தருவதாகச் சொல்லி மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரத்தில் பலரும் புகார் அளித்திருந்தனர். அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தது. இது குறித்துக் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறை செந்தில் பாலாஜி மற்றும் அவருக்குத் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தினர்.
செந்தில் பாலாஜி: அதற்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்திய நிலையில், ஜூன் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை சுமார் 9 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை இரவு வரை தொடர்ந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அன்று இரவு அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவரது இதய குழாயில் நான்கு இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவருக்கு அடைப்பை அகற்ற ஆப்ரேஷன் செய்யப்பட்டது. ஆப்ரேஷனுக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி சில நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கும் சிறை மருத்துவமனையிலேயே அவர் இருந்தார்.
விசாரிக்க அனுமதி: மறுபுறம் செந்தில் பாலாஜியின் கைது தவறு எனக் கூறி அவரது மனைவி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். இதில் முதலில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்த நிலையில், பின்னர் அது 3ஆவது நீதிபதிக்குச் சென்றது. இருப்பினும், ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜிக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

செந்தில் பாலாஜி தரப்பின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரக் கோரி அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி அவரை ஆகஸ்ட் 12 வரை விசாரிக்க அனுமதி அளித்தார். நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் புழல் சிறைக்கு விரைந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின் நகலைக் காட்டி செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்தனர்.
வீடியோ: நீல நிற சட்டை அணிந்திருந்த செந்தில் பாலாஜியைப் புழல் சிறையில் இருந்து அமலாக்கத் துறையினர் கார் மூலம் அழைத்து வந்தனர். லைட்டான தாடி, இரு பக்கமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் என அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னைக்கு அழைத்து வரும் வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கைதுக்குப் பிறகு 55 நாட்களுக்குப் பிறகு இப்போது அமலாக்கத் துறையினர் அவரை காவலில் எடுத்துள்ளது.

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதற்காக அங்கே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவே செந்தில் பாலாஜியிடம் விசாரணையை அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடங்குவார்கள் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications