மறுபடியும் டிரெண்டான திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. வீட்டை பார்த்து திகைப்பு
சென்னை: திமுக பேச்சாளர், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஏழ்மையான நிலை மற்றும் அவரது வீடு குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சிவாஜி கிருஷ்ண மூர்த்தி என் வீட்டை விட ஜெயிலில் நிறைய வசதி இருக்கு என கூறியுள்ளார். அதை பார்த்து பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றை இப்போது பார்ப்போம்.
திமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதற்கு பெயர் போனவர். ஆளுநர் ரவி முதல் குஷ்பு வரை கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு ஜனவரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்துத் தரக்குறைவான முறையில் அவதூறாகப் பேசியிருந்தார். இதனால் கடும் கோபம் அடைந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு டி.ஜி.பியிடம் அன்றைக்கு கோரிக்கை வைத்தார்.

இதுஒருபுறம் எனில் சென்னையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, மீண்டும் ஆளுநர் ரவி குறித்தும், பா.ஜ.க நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்தும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்தார். இந்த சர்ச்சைகள் காரணமாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. அவரை கடந்த ஜூனில் கைதும் செய்தது. இதனிடையே கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்காலிகமாக நீக்கப்பட்டதாக திமுக தலைமை அறிவிப்பு அப்போது வெளியிட்டது. தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி எதிர்காலத்தில் இதுபோல அநாகரிகமாக பேசக்கூடாது என கூறி ஜூலை மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதனிடையே தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த காரணத்தால் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அண்மையில் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். தி.மு.க. தலைமை வெளியிட்ட அறிவிப்பில், சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்றிட கோரிக்கை விடுத்ததை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என்று கடந்த இரண்டு வாரம் முன்பு கட்சியில் சேர்க்கப்பட்டார்.
இதனிடையே அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு பதிலடியாக மீம் டெப்ளெட் போல் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை பலரும் பயன்படுத்த தொடங்கினார்கள். இதை பார்த்த ஊடகம் ஒன்று, திமுக பேச்சாளர், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை பேட்டி எடுத்தது. அப்போது அவரது வீடு குறித்த காட்சிகளை வெளியிட்டது. அந்த வீடு மிகவும் ஏழ்மையான நிலையில சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இருப்பதை காட்டியது. அந்த பேட்டியில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கூறும் போது, என் வீட்டை விட ஜெயிலில் நிறைய வசதிகள் நிறைய உள்ளது என்று கூறினார்.
இதை பார்த்து கருத்து தெரிவித்துள்ள திமுக ஆதரவாளர் ஒருவர், இந்த மாதிரி லட்சம் பேர் இருந்தாங்க , இருக்குறாங்க , இருப்பாங்க,
அது தான் திமுக, கட்சியின் கொள்கை , பெரியார் அண்ணா கலைஞரின் மீது வெறி தான் உயிர் மூச்சு. இது தான் பெருமைன்னு வாழ்ற வாழ்க்கை இருக்கே .. அந்த சுகம் திமுக காரனுக்கு மட்டும் தான் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், இது புதிதல்ல 90% திமுக தொண்டன் நிலை இதுதான் ; இன்றைய இளைஞர்கள் கழகத்தை விட்டு விலகி செல்வதற்கு முதன்மையான காரணம் தங்களின் தாத்தா தந்தையின் உழைப்பை அங்கீகரிக்க தவறிய தலைமையை உணர்ந்துதான். மேலும் வேறு கட்சியில் இருந்து வருபவருக்கே முன்னுரிமையும் மற்றொரு காரணம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications