ஆந்திரா மாடல்.. திமுகவுக்கு ஸ்கெட்ச் போட்ட பிகே! எடப்பாடி கொடுக்கும் ஆஃபருக்கு ஓகே சொல்வாரா விஜய்?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்தான யூகங்கள் தற்போது இறக்கை கட்டி பறந்து வருகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண் போல தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி - விஜய் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகராக இருந்து அரசியலில் குதித்திருக்கும் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி என முதல் மாநாட்டிலேயே அறிவித்திருந்தார். தற்போது மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் பிஸியாக இருக்கும் அவர் அடுத்ததாக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தை நடத்த தயாராகி வருகிறார்.

இதற்கிடையே கட்சியில் ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விஜய் கட்சியை நோக்கி ஏராளமானோர் இணைந்திருக்கின்றனர். அந்த வகையில் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் கட்சியில் இணைந்த உடனேயே அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
இது மட்டுமல்லாமல் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் தமிழக வெற்றிக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே ஜான் ஆரோக்கியசாமி தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார ஆலோசகராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் விஜய் கூட்டணி குறித்து இன்னும் பேசவில்லை.. அதே நேரத்தில் கட்சி மாநாட்டின் போதே ஆட்சி அதிகாரத்தில் பங்கு கூட்டணி அமைக்க தயார் என விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்கலாம் என பேசப்படுகிறது. ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் ஆய்வு நடத்தி சில அறிவுரைகளை விஜய் தரப்புக்கு வழங்கி இருக்கிறார். தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியும் பலமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் விஜய்க்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். எனவே, விஜய் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என சொல்லியதாக கூறப்படுகிறது.
ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் தான் கூட்டணி என விஜய் கூறியிருந்த நிலையில் அதிமுக தலைமையை ஏற்றுக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு 20 சதவீத வாக்கு இருக்கும் நிலையில், அதிமுக ஏறக்குறைய 30 சதவீத வாக்குகளை வைத்திருக்கிறது. இரு கட்சிகளும் சேர்வதோடு பிற கூட்டணி கட்சிகளும் சேர்ந்தால் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கு வங்கியை பெற்று ஆட்சியைப் பிடிக்கலாம் என கூறினாராம்.
ஆந்திராவில் எதிரும் புதிதாக இருந்த சந்திரபாபு நாயுடுவும் பவன் கல்யாணும் கூட்டணி அமைத்து சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் ஆகவும், பவன் கல்யாண் துணை முதலமைச்சராகவும் ஆகியிருக்கிறார்கள். அதே பாணியில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், விஜய் துணை முதலமைச்சராகவும் ஆகலாம். அடுத்தடுத்த தேர்தல்களை விஜய் தன்னை தனியாக நிலை நிறுத்திக் கொள்ள இது முன்னோட்டமாக அமையும் என கூறினாராம்.
ஆனால் 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை நிரூபித்து அடுத்தடுத்த தேர்தல்களில் கூட ஆட்சி கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என விஜய் நினைக்கிறார். அதற்கு காரணம் அவருக்குள் இருக்கும் ஈகோ தான் என்கின்றனர் அவர் தரப்பு நிர்வாகிகள். அதே நேரத்தில் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகள் நடக்கும் நிலையில் ஒரு சமூக முடிவு எட்டப்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications