வேலுமணிக்கு அடிச்சது யோகம்..‘மாண்புமிகு’ அமைச்சராக்க திட்டம்! விஜய் அமைச்சரவை தாமதமாவது இதனால் தான்!
சென்னை: அதிமுக பிளவால் தான் தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள வேலுமணி தரப்பு அமைச்சரவையில் பங்களிக்க உள்ளதாகவும், வேலுமணி தரப்பிற்கு எத்தனை அமைச்சர்கள் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே காங்கிரசிற்கு 2 அமைச்சர்கள் அளிக்க தவெக தலைமை முடிவு செய்துள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை விரிவாக்கம் இறுதி செய்யப்படும் என்றும் தவெக வட்டாரங்கள் சொல்கின்றன.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, தமிழகத்தின் புதிய ஆட்சிக் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான அரசு அமைந்தது.

இதற்கிடையில், வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுகவில் கடும் அதிருப்தி உருவானது. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ஒரு தரப்பு வலியுறுத்த தொடங்கியது.
அதிமுக பிளவு
அதேசமயம், சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி. வேலுமணியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் இரு அணிகளும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன. எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் பசுமை வழிச்சாலை இல்லத்தில் ஆலோசனை நடத்திய நிலையில், சி.வி. சண்முகம் வீட்டில் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம்
நம்பிக்கை வாக்கெடுப்பிலும் இந்த பிளவு வெளிப்படையாக தெரிந்தது. எடப்பாடி பழனிசாமி அணியினர் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்த நிலையில், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் அணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் அதிமுகவில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் எந்த அணியில் உள்ளனர் என்ற விவாதமும் உருவாகியுள்ளது. இந்த மாற்றமே தற்போது அமைச்சரவை விரிவாக்கத்தில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் அமைச்சரவை
தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள வேலுமணி தரப்பை அமைச்சரவையில் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அந்த அணிக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் வழங்குவது என்பது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்க தவெக தலைமை சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக அதிருப்தி அணி
இதனுடன், அதிமுக அதிருப்தி அணியினருக்கும் இடம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால், அமைச்சரவை விரிவாக்க அறிவிப்பு தாமதமாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
வேலுமணி தரப்பிலிருந்து சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், இசக்கி சுப்பையா, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் அமைச்சரவை பட்டியலில் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் லீமா ரோஸ் அல்லது மரகதம் குமரவேல் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பேச்சும் உள்ளது.
விஜய் தான் காரணம்
இதற்கிடையில், "அதிமுகவில் பிளவு இல்லை" என்று எஸ்.பி. வேலுமணியும், சி.வி. சண்முகமும் தொடர்ந்து கூறி வந்தாலும், சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசிய பிறகு, எஸ்.பி. வேலுமணிக்கும் தனியாக பேச வாய்ப்பு வழங்கப்பட்ட போதே கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படையாக காட்டிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணமே விஜய் தான் என்றும் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications