கோடை விடுமுறையில்.. கொடைக்கானல் செல்வது போல்! அப்பப்போ மட்டும் தலை காட்டும் விஜய்! சொதப்பும் தவெக!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தற்போது சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஆயிரம் விளக்கு, தி நகர், எழும்பூர் தொகுதிகளில் விஜய் ரோட் ஷோ மேற்கொண்ட நிலையில் எழும்பூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டு வருவது தொண்டர்களை ஏமாற்றத்தில் தள்ளி உள்ளது. விஜயின் கள அரசியல் மேலாண்மை மிக மோசமாக இருப்பதாகவும். இதனால் தொண்டர்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஏற்கனவே தங்களது பிரச்சார வேகத்தை அதிகரித்துள்ளன.
இந்நிலையில், இரு தொகுதிகளில் இந்த தேர்தலில் களமிறங்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். மேலும், தனது கட்சி தொண்டர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

விஜய் பிரச்சாரம்
அந்த வகையில், சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு, தி.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் நேற்று பிரம்மாண்ட சாலை வலம் மேற்கொண்டார். மதியம் சுமார் 3 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட அவர், நந்தனம் பகுதியில் இருந்து தனது சாலை பிரச்சாரத்தை தொடங்கினார். தி.நகர் தொகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரம் ரத்து
இதனைத் தொடர்ந்து வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் விஜய் நுழைந்தார். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக அவருக்கு வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொளத்தூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் திரண்டதால் கூட்டம் கட்டுக்கடங்காத நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக பிரச்சார மேலாண்மை
இதனால் போலீசார் மற்றும் நிர்வாகத்தினர் கூட்டத்தை கட்டுப்படுத்த பெரும் சிரமம் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், எழும்பூர் தொகுதிக்குள் உள்ள வேப்பேரி பகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டதால் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் எழும்பூர் பகுதியில் நடைபெற இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொண்டர்கள் அதிருப்தி
இந்த திடீர் மாற்றம் காரணமாக எழும்பூர் பகுதியில் விஜயை எதிர்பார்த்து காத்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவும் சில இடங்களில் பிரச்சார அட்டவணையில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், இதனால் கள அரசியல் மேலாண்மை குறித்த அதிருப்தி தொண்டர்கள் மத்தியில் உருவாகி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கரூர் சம்பவம்
விஜய் கட்சி ஆரம்பித்தபோது உள்ளரங்க நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டார். அதற்குப் பிறகு மாநாடு என எப்போதாவது ஒருமுறைதான் விஜய் பொதுவெளிக்கு வருவது வழக்கம். அதற்குப் பிறகு விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்திய போதும் கரூர் சம்பவம் உள்ளிட்டவற்றால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் விஜய் வெளியே வரவில்லை. இதனால் அந்த சந்திப்பு நிகழ்ச்சியும் முழுமையாக நிறைவடையவில்லை.
2026 சட்டமன்ற தேர்தல்
தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கி இருக்கும் நிலையில் இதுவரை முழுமையாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போன்ற சீனியர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கோடை விடுமுறைக்கு கொடைக்கானல் செல்வது போல அவ்வப்போது மட்டுமே விஜய் தலைகாட்டி வருகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.














Click it and Unblock the Notifications