இந்தியாவையே உலுக்கிய "விஜய் சைக்கிள்".. பார்க்கிங்தான் காரணம்... பிஆர்ஓ விளக்கம்
சென்னை: விஜய் சைக்கிளில் வந்த காரணம் அவர் வீட்டுக்கு அருகில் வாக்குப் பதிவு பூத் இருந்ததும், சின்ன சந்து என்பதால் காரை நிறுத்த முடியாது என்பதும் என்று அவரது செய்தித் தொடர்பாளர் ரியாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குபதிவு மையத்துக்கு நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்கு பதிவு செய்து விட்டுத் திரும்பினார்.
Recommended Video
விஜய் சைக்கிளில் சென்றதற்கு காரணம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் என்று சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்யப்பட்டு வருகிறது.
குஷ்பு அதிர்ச்சி
இதையடுத்து பாஜக தரப்பு அதிர்ச்சி அடைந்தது. பாஜக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு கூறுகையில் விஜய் வீட்டுக்கு அருகே வாக்கு பதிவு மையம் இருந்ததால் அவர் சைக்கிளில் வருகை தந்தார் வேறு எதுவும் காரணம் கிடையாது என்று தெரிவித்தார்.
செய்தித் தொடர்பாளர் விளக்கம்
தேர்தல் நேரத்தில் விஜய் செய்யும் சிறு சிறு விஷயங்களும் அரசியலாக்கப்படுவதால் அவரது செய்தி தொடர்பாளர் ரியாஸ் இது தொடர்பாக ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
பார்க்கிங் பிரச்சினை
இந்த விளக்கத்தில் அவர் கூறுகையில், வாக்குச்சாவடி அருகே விஜய் வீடு அமைந்துள்ளது. மேலும், வாக்குச்சாவடியில் பார்க்கிங் வசதி கிடையாது. எனவே காரில் வந்தால் சிரமம் என்பதால் சைக்கிளில் வந்தார் என்று விளக்கமளித்துள்ளார். இதன் மூலம் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திடீர் விளக்கம்
கடந்த முறையும் ஓட்டு போடும்போது விஜய் சைக்கிளில்தான் பயணம் செய்து வந்தார். எனவே அவர் தற்போது அரசியல் மெசேஜ் தருவதற்காக , சைக்கிளில் வரவில்லை என்று ஒரு தரப்பு கூறி வந்தது. இப்போது விஜய் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அளித்துள்ள விளக்கம் இதையொட்டிதான் இருக்கிறது. சமூக வலைதளங்களிலும் பிற இடங்களிலும் விஜய் சைக்கிளில் வந்தது பெரிதாக பேசப்படுவதால் சட்டென்று விளக்கமளித்துள்ளார் அவரின் செய்தி தொடர்பாளர் என்கிறார்கள்.