ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு! ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என விஜய் இரங்கல்
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என தெரிவித்திருக்கிறார்.
அதேபோல நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் பதவில், “காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், காங்கிரசு கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயா இளங்கோவன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்” என்று கூறியுள்ளார்.
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒருவர். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், செயல் தலைவர் என ஏற்றுக் கொண்ட பொறுப்புகள் அனைத்தையும் திறம்பட வகித்தவர். மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நான் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது பல்வேறு துறைகளின் இணை அமைச்சராக பணியாற்றியவர் இளங்கோவன் . என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவர், நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்த்திருந்த வேளையில் அவரது மறைவுச் செய்தி மனதை வாட்டுகிறது. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications