இதாங்க ஃபர்ஸ்ட் டைம்.. சட்டசபையில் நடந்த ‘நடக்காத’ ஒன்று! வரலாற்றை புரட்டிப் போட்ட விஜய்! என்னாச்சு?
சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. புதிய அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் அரசியல் வட்டாரங்களின் கவனம் முழுவதும் சட்டப்பேரவை மீது திரும்பியிருந்தது. இந்த நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை அரிதாக நடந்த ஒரு சம்பவம் இன்று சட்டப்பேரவையில் அரங்கேறியுள்ளது.
பொதுவாக புதிய அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த நடைமுறையின்படியே இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டத்தொடர் தொடங்கியது.

சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் அர்லேகருக்கு, கோட்டை வளாகத்தில் அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சபாநாயகர், சட்டப்பேரவை செயலாளர் உள்ளிட்டோர் ஆளுநரை வரவேற்றனர். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர்
அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கினார். புதிய அரசின் கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் நிர்வாக முன்னுரிமைகள் குறித்து உரையில் இடம்பெற்றது. இதற்கிடையில், எதிர்க்கட்சியான திமுக சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு கருப்புப் பட்டை அணிந்து வந்தது அரசியல் கவனத்தை ஈர்த்தது. அரசின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்ததாக கூறப்படுகிறது.
திமுக எம்.எல்.ஏ.க்கள்
சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது வேறு ஒரு விஷயம். வழக்கமாக புதிய அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணிப்பது, முழக்கங்கள் எழுப்புவது அல்லது வெளிநடப்பு செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆளுநர் உரை
ஆனால் இன்று ஆளுநர் உரை நடைபெறும் போது பெரிய அளவிலான அமளி, கூச்சல், முழக்கங்கள் அல்லது வெளிநடப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. கடுமையான அரசியல் போட்டி நிலவி வந்த சூழலிலும், ஆளுநர் உரை அமைதியான சூழலில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்திய தேர்தலில் கடுமையான போட்டிக்குப் பிறகு ஆட்சியும் எதிர்க்கட்சியும் நேருக்கு நேர் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாளில் அமைதியாக நடந்தது.
திமுக
இவை எல்லாவற்றையும் விட தமிழக சட்டசபையில் இதுவரை நடக்காத ஒரு வரலாற்று சம்பவம் அரங்கேறி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்திய பிறகு திமுக அண்ணா தலைமையில் ஆட்சியைப் பிடித்த நிலையில் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. பின்னர் கலைஞர் கருணாநிதி முதல்வர் ஆனார். அதற்குப் பிறகு அதிமுக உருவாகி, எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்த போது திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. தொடர்ந்து ஜெயலலிதா, ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் என பல முதலமைச்சர்களை கண்டது தமிழக சட்ட சபை.
அதிமுக
ஆனாலும், அதிமுக ஆளும் கட்சியாக இருந்தால் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும். திமுக ஆளும் கட்சியாக இருந்தால் அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும். ஆனால் கிட்டத்தட்ட 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுகவும் திமுகவும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 75 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஒரே வரிசையில் அமர வைத்துவிட்டார் விஜய் என கொண்டாடி வருகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.












Click it and Unblock the Notifications