விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்தால்.. ஏற்புடையது அல்ல.. விசிக திருமாவளவன் பரபர கருத்து
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் திருச்சி பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்து இருந்தால், அது ஏற்புடையது அல்ல என்றும், ஜனநாயக நாட்டில் எல்லாருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகளை செய்து வருகிறார். 2 மாநாடுகளை நடத்தி முடித்துள்ள விஜய் தற்போது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.

திருச்சியில் விஜய் மக்கள் சந்திப்பு
வரும் 13 ஆம் தேதி திருச்சியில் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க உள்ளார். இதற்காக அனுமதி கேட்டு தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் கொடுத்தார். ஆனால் அதற்கு முதலில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதன் பின்னர் திருச்சி மரக்கடையில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டும் மீண்டும் திருச்சி காவல் ஆணையரிடம் புஸ்சி ஆனந்த் கடிதம் கொடுத்தார்.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
இதன்பிறகு விஜய் ரோடு ஷோ செல்லக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விஜய் பேச அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் புஸ்சி ஆனந்த் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டிருந்தது. இந்த விவாகாரம் தொடர்பாக ட்வீட் பதிவிட்ட விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்து திமுக பயப்படுவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி, இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர் திருச்சியில் விஜய் பேசுவதற்கு அனுமதி மறுத்து இருந்தால் அது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.
அவருக்கு பின்னால் பாஜக இருக்கிறது
திருமாவளவன் கூறியதாவது:- செங்கோட்டையன் இயல்பாகவே அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்புக்கு தான் போராடுகின்றார் என்றால் அதனை வாழ்த்த நான் கடமைப்பட்டு இருக்கிறேன். ஆனால் அவரை பாஜக இயக்குகிறது என்றால் அது அதிமுகவிற்கு நல்லது கிடையாது. இதனை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன். இப்போது நான் ஐயப்பட்டதைப் போல அவருக்கு பின்னால் பாஜக இருப்பதை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து இருப்பதன் மூலமாக உறுதிபடுத்தியிருக்கிறார்.
விஜய்க்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும்
பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டே அந்த கட்சியை கபளீகரம் செய்யும் முயற்சியினை செய்து வருகிறது என்பதை முன்பு சொல்லியிருந்தேன். எடப்பாடி பழனிசாமிக்கு என் மீது ஆத்திரமும் எரிச்சலும் வந்தது. அதிமுகவை தனியே போக விடாமல் கூட்டணியில் இணைத்தாலும், தனித்து செயல்பட விடாமல், கபளீகரம் செய்யும் முயற்சியினை பாஜக செய்து வருகிறது என்பதை தற்போது அதிமுக தொண்டர்களும் உணர தொடங்கி உள்ளனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து பாஜக பேசுகிறது என்றால் அது என்ன மாதிரியானது என்பதை அதிமுக தொண்டர்கள் நினைத்து பார்க்க வேண்டும். அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொண்டுவிட்டு, அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஏன் பாஜக சந்தித்து பேச வேண்டும். என்ன துணிச்சலில் இப்படி பேசுகிறது. இப்படி பேசுகிறது என்றால் அதிமுகவை பாஜக எந்த இடத்தில் வைத்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் திருச்சி பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்து இருந்தால், அது ஏற்புடையது அல்ல.. ஜனநாயக நாட்டில் எல்லாருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு.. அவருக்கு உரிய அனுமதியினை வழங்கியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications