TVK Vijay: தமிழ்நாட்டில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்: தவெக தலைவர் விஜய் வேதனை!
சென்னை: “பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன” என தவெக தலைவர் விஜய் சமூக வலைத்தள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது, பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அண்மையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்தின் உள்ளேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மதுரை அருகே ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தும் சிசிடிவி வீடியோ வெளியானது.
அதைத்தொடர்ந்து, கரூரில் மருந்துக்கடையில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவமும், அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் அளிக்கும் வகையில், அரசு தனி இணையதளத்தை உருவாக்க வேண்டும், இதில் அளிக்கப் பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்ட விபரங்களை பதிவிட வேண்டும் என சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.
பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.
இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications