தேர்தல் வருது..இந்த வருடம் மட்டும் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து! போன வருஷம் விஜய் மறந்துட்டாரே
சென்னை: நடிகரும் தேமுதிக பொது செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் சீமான் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த ஆண்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் விஜய் மட்டும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையை சேர்ந்த விஜயராஜ் விஜயகாந்த் என தனது பெயரை மாற்றிக் கொண்டு தமிழ் திரையுலகில் நுழைந்தார். ஆரம்பத்தில் துணை வேடங்களில் நடித்த வாய்ப்பு கிடைக்கும் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற குறிக்கோளோடு இருந்தவர்.
அதற்கேற்றார் போல் சில படங்களும் அமைந்தது. விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருடனான அறிமுகம் விஜயகாந்த் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கினார் சந்திரசேகர். இதன் மூலம் புரட்சிக்கலைஞரானார் விஜயகாந்த்.

விஜயகாந்த்
சட்டம் ஒரு இருட்டறை, சிகப்பு மல்லி, சின்ன கவுண்டர், கேப்டன் பிரபாகரன், வல்லரசு, ரமணா உள்ளிட்ட திரைப்படங்கள் விஜயகாந்தை உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க வைத்தது. ரஜினி கமல் என்ற இரு பெரும் நாயகர்கள் தமிழ் திரையுலகை ஆட்சி செய்து கொண்டிருந்தபோதே அவர்களுக்கு இணையாக உயர்ந்தவர். கலைஞர் கருணாநிதியின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர் ஒரு சில காரணங்களால் தனித்து கட்சி தொடங்கினார்.
தேமுதிக
மதுரையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் பிறந்தது. தனித்துப் போட்டியிட்டு மூன்றாவது இடத்திற்கு வந்த விஜயகாந்த், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி ஏற்றார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவருக்கு பிறகு கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆனவர் விஜயகாந்த் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னரும் பின்னரும் பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்திருந்தாலும் விஜயகாந்த் அளவுக்கு வளர முடியவில்லை.
விஜயகாந்த் அரசியல்
அதே நேரத்தில் சட்டசபையில் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதிமுகவுடன் மோதல் போக்கு ஏற்பட்டது. 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணி உருவானது. அதில் விஜயகாந்த் தோல்வியடைந்தார். அதற்குப் பிறகு அவரது அரசியல் வாழ்வு சரியத் தொடங்கியது. உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் அரசியல் இருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் விஜயகாந்த் மரணம் அடைந்தார். அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்த் பிறந்தநாள்
கடந்த ஆண்டு அவரது பிறந்தநாளின் போது அவரது நினைவிடம் கேப்டன் ஆலயமாக திறக்கப்பட்டது. தற்போது வரை தினமும் ஆயிரக்கணக்கானோர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அவரை ஒரு கடவுள் போலவே வணங்கி வருகின்றனர். ஆகஸ்ட் 25ஆம் தேதி ஆன இன்று தான் விஜயகாந்தின் பிறந்தநாள். இதையொட்டி தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று அவரை நினைவு கூர்ந்துள்ளனர்.
தலைவர்கள் வாழ்த்து
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் விஜயகாந்தின் பிறந்தநாள் ஒட்டி அவரை நினைவு கூர்ந்துள்ளனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய், விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூறுவதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.
விஜய்
அதே நேரத்தில் கடந்த ஆண்டு விஜய் விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் விஜய்யின் திரைப்படங்கள் சரியாக போகாத நிலையில் செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்க்காக அண்ணன் கேரக்டரில் நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த். அதற்கு பிறகு தான் விஜய் மார்க்கெட் ஓரளவு உயர்ந்தது. தொடர்ந்து பல நிகழ்வுகளில் விஜயகாந்தின் தம்பியின் அடையாளப்படுத்திய விஜய், அதற்கு பிறகு ரஜினிகாந்தையும் எம்ஜிஆரையும் தனது திரை வாழ்வின் குருக்களாக ஏற்றுக் கொண்டார்.
விமர்சனம்
அதே நேரத்தில் விஜயகாந்த் குடும்பம் விஜய் மீது தனிப்பட்ட முறையில் அன்பு வைத்திருந்தது. கேப்டனின் தம்பி என்று அழைத்து வந்தனர். விஜயகாந்த் மரணம் அடைந்தபோது விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதே நேரத்தில் இந்த ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கும் விஜய் கடந்தாண்டு விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வரும் நிலையில் விஜயகாந்த் ஆதரவு வாக்குகளை பெறுவதற்காகவே மாநாட்டில் விஜயகாந்த் குறித்து பேசிய விஜய் தற்போது வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறார் என கூறுகின்றனர் விஜயகாந்த் விசுவாசிகள். அதே நேரத்தில் கடந்த ஆண்டு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications