புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்குதே! அடித்து ஆடும் ஐயூஎம்எல், அமமுக! இன்னைக்கு வாய்ப்பில்லை!
சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் பரபரப்புக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இருப்பினும் இதுவரை ஆட்சி அமைக்க அதிகாரப்பூர்வ அழைப்பு வராததால், இன்று பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஐயூஎம்எல், அமமுக உள்ளிட்ட கட்சிகளில் கிளப்பியுள்ள பிரச்சனைகளே காரணம் என சொல்லப்படுகிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. முதல் முறையாக தேர்தலை சந்தித்த கட்சி என்பதால் இந்த வெற்றி தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆனால் ஆட்சி அமைக்க தேவையான அறுதிப் பெரும்பான்மையான 118 உறுப்பினர்கள் எண்ணிக்கை கிடைக்காததால் சிக்கல் உருவானது. இதையடுத்து ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை பெறும் முயற்சியில் தவெக தீவிரமாக இறங்கியது.
தவெக
முதலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தது. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவு கிடைத்ததால் தவெகவின் பலம் 113 ஆக உயர்ந்தது. இந்த ஆதரவு கடிதங்களுடன் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்கவில்லை. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு மேலும் அதிகரித்தது.
ஐயூஎம்எல்
அதன்பிறகு தவெக தரப்பில் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. இதனால் தவெகவின் மொத்த பலம் 116 ஆக உயர்ந்தது. இதற்கிடையே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு தரும் என்ற தகவல்கள் பரவின. ஆனால் பின்னர் அக்கட்சி திமுக கூட்டணியிலேயே தொடரும் என்று தெளிவுபடுத்தியது. இதனால் தவெக இன்னும் பெரும்பான்மையை எட்டாத நிலை தொடர்கிறது.
விஜய்
இந்த சூழலில் நேற்று மாலை மீண்டும் ஆளுநர் மாளிகை சென்ற விஜய், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சென்றிருந்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தவெக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால் விஜய் ஆளுநரை சந்தித்து பல மணி நேரங்கள் கடந்தும் எந்த அதிகாரப்பூர்வ அழைப்பும் வெளியாகவில்லை.
திருமாவளவன்
இதனால் இன்று பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்பு குறைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கிடையே விசிக தலைவர் திருமாவளவனின் முடிவும் தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக ஆதரவு கிடைத்தால் தவெக பெரும்பான்மைக்கு மிக அருகில் செல்லும் சூழல் உருவாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்தக் கட்சி இன்னும் தனது இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
தமிழக அரசியல்
மற்றொரு பக்கம் அதிமுகவும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதுச்சேரியில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னைக்கு திரும்பியுள்ளதும் அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த சில மணி நேரங்களில் நடக்க உள்ள அரசியல் நகர்வுகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார், பெரும்பான்மை எப்படிச் சோதிக்கப்படும், தவெக அடுத்த கட்டமாக என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications