வருமான வரியை மறைத்ததாக வழக்கு!ரூ 1.50 கோடி அபராதத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போன விஜய்
சென்னை: வருமானத்தை மறைத்ததாக கூறி ரூ 1.50 கோடி அபராதத்தை உறுதி செய்த தனி நீதிபதியின் உத்தரவை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி கொண்ட அமர்வில் நடிகர் விஜய் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2015- 2016-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது அந்த ஆண்டுக்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை , நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்திய வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது.
அப்போது "புலி" படத்திற்கு பெற்ற ரூ 15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறியப்பட்டது. வருமானத்தை மறைத்ததாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்தது.
தனக்கு அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் ஆறு ஆண்டுகள் காலதாமதமாக 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.
வருமான வரித்துறை தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் சீனிவாஸ், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், 6 மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்தது சரிதான். விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வெளியானது.
அதில் நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து, உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. எனவே இதில் நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனுவை விஜய் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications