புதிய அரசின் முதல் மெகா திட்டம்.. விஜய் சென்னை மக்களுக்கு சொல்லப்போகும் குட்நியூஸ்..!
சென்னையில் நீண்டநாட்களாக மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் முதல் பகுதி விரைவில் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று இருக்கும் சூழ்நிலையில், இந்த மெட்ரோ திட்டமே புதிய ஆட்சியின் முதல் முக்கிய உள்கட்டமைப்பு திட்ட தொடக்கமாக அமையக்கூடும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகரும் அரசியல் தலைவருமான சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரும் போராட்டத்திற்கு பின்பு ஆட்சி அமைத்து இன்று சட்டமன்றத்திலும் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த நிலையில் விஜய் சென்னை நகர மக்களுக்கு மிக முக்கியமான போக்குவரத்து திட்டத்தை திறந்து வைக்க உள்ளார்.

பூந்தமல்லி முதல் வடபழனி மெட்ரோ பாதை தயார்
சென்னையில் மொத்தம் 118.9 கிலோமீட்டர் நீளத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், பூந்தமல்லி - போரூர் - வடபழனி வழித்தடம் முதலில் திறக்கப்பட உள்ளது. இந்த பாதை ஆர்காட் சாலை வழியாக செல்லும் முக்கிய நகர போக்குவரத்து இணைப்பாக பார்க்கப்படுகிறது.
இதில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான பகுதிக்கு ஏற்கனவே இறுதி அனுமதியை பெற்றுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், போரூர் முதல் வடபழனி வரையிலான பகுதியில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் (CMRS) விதித்திருந்த முக்கிய பணிகளும் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன.
மீண்டும் ஆய்வுக்கு விண்ணப்பம்
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (CMRL) அதிகாரிகள் கூறுகையில், CMRS அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளின் விவரங்களும் ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
"போரூர் - வடபழனி பாதையில் மேற்கொண்ட பணிகள் குறித்த முழு தகவல்களையும் சமர்ப்பித்து மீண்டும் அனுமதி கோரப்பட்டுள்ளது. அடுத்த வார இறுதிக்குள் CMRS ஆய்வு நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆய்வு திருப்திகரமாக முடிந்தால், ஒரு அல்லது இரண்டு நாட்களுக்குள் இறுதி அனுமதி கிடைக்கும்" என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால், இந்த வழித்தடம் திறக்கப்படுவதற்கான இறுதி கட்ட பணிகள் வேகமடைந்துள்ளன.
வேக கட்டுப்பாடு தளர்வு
மெட்ரோ சேவை தொடங்கும் முன் பயணிகளின் வசதிக்காக சில முக்கிய மாற்றங்களையும் CMRL கோரியுள்ளது. தற்போது போரூர் - வடபழனி வழித்தடத்தில் ரெயில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 25 கிலோமீட்டர் வேக கட்டுப்பாட்டை 40 கிலோமீட்டராக உயர்த்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
அதேபோல், பூந்தமல்லி - போரூர் பாதையில் தற்போது 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரெயில்களை, 10 நிமிட இடைவெளிக்கு குறைக்கவும் கோரப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், குறிப்பாக அலுவலக நேர நெரிசலில் பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை போக்குவரத்தில் பெரிய மாற்றம்
பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இந்த மெட்ரோ பாதை திறக்கப்பட்டால், நகரத்தின் மேற்கு பகுதியிலிருந்து மத்திய சென்னை நோக்கி பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேகமான மற்றும் எளிதான போக்குவரத்து வசதி கிடைக்கும்.
குறிப்பாக ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், தினசரி அலுவலக பயணிகள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை விட முக்கியாக விஜய் முதல்லமைச்சராகி மக்களின் பயன்பாட்டுக்காக துவங்கி வைக்கும் திட்டம் இதுவாக இருக்கும். இது மிகவும் ஸ்பெஷல்.












Click it and Unblock the Notifications