விஜய்யின் 2ஆம் கட்ட சுற்றுப்பயணம்.. தவறை திருத்திக் கொள்ளாத தவெக தலைவர்.. சோகமான மாவட்ட நிர்வாகிகள்!
சென்னை: தவெக தலைவர் விஜய் தனது 2ஆம் கட்ட மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்திலும் மீண்டும் ஒரே தவறை செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே தவெகவில் 2ஆம் கட்டத் தலைவர்கள் இல்லாமல் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், மக்கள் சந்திப்பு பயணத்தில் கூட விஜய் தனது பிரச்சார வாகனத்தில் மாவட்டச் செயலாளர்களை ஏற்றாமல் அமைதி காப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து தவெக தலைவர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மாவட்ட வாரியாக மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் தவெக தொண்டர்களை சந்தித்த விஜய், நேற்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.

திருச்சி மற்றும் அரியலூர் சுற்றுப்பயணத்தில் செய்த சில தவறுகளை நாகை மற்றும் திருவாரூரில் விஜய் விரைவாக மாற்றிக் கொண்டார் என்று சொல்லலாம். குறித்த நேரத்திற்குள் வர முடியாவிட்டாலும், 1 மணி நேரம் தாமதத்திற்கு பின் வந்து சேர்ந்தார். அதேபோல் தவெகவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் மாவட்ட எல்லையில் இருந்தே அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
ஆனால் விஜய் மீண்டும் மீண்டும் ஒரு தவறை செய்து கொண்டே இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மதுரை மாவட்டத்தில் நடந்த 2வது மாநில மாநாட்டின் போதே தவெகவில் 2ஆம் கட்டத் தலைவர்கள் இல்லை என்பதை விஜய் உணர்ந்திருந்தார். அதன் காரணமாகவே ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் போட்டியிடுகிறார் என்பதாக நினைத்து வாக்களிக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் விஜய் கேட்டுக் கொண்டார்.
அதேபோல் தவெகவில் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் சிடி நிர்மல் குமார் ஆகியோருக்கு பின் பெரியளவில் முகம் தெரிந்த நபர்கள் இல்லை என்ற விமர்சனம் தொடக்கம் முதலே இருந்து வருகிறது. ஆனால் இந்த சிக்கலை களைய விஜய்க்கு வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டு வருவதாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் அந்தந்த மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும் கூட, நிர்வாகிகளின் பெயரை கூட விஜய் சொல்வதில்லை. நாகை மாவட்டத்திற்கு பயணிக்கும் போது அந்த மாவட்டச் செயலாளர் சுகுமாறனை தனது பிரச்சார வாகனத்தில் ஏற்றும் போது அவருக்கு மிகப்பெரிய மைலேஜ் கிடைக்கும். எதிர்காலத்தில் தவெக தொண்டர்கள் எளிதாக மாவட்டச் செயலாளரை அடையாளம் காணவும் வசதியாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் தவெக மாவட்டச் செயலாளர் யாரும் செய்தியாளர்களிடம் கூட பேசுவதில்லை என்ற சூழலில், அவர்களை 2ஆம் கட்டத் தலைவர்களாக வளர்க்க வேண்டிய பொறுப்பு விஜய்க்கு இருக்கிறது. 1967ல் திமுக வென்றதற்கு அண்ணா பின்னால் வலுவான 2ஆம் கட்டத் தலைவர்கள் இருந்தது மிக முக்கியக் காரணமாகும்.
அதனால் அடுத்தடுத்த சுற்றுப்பயணத்திலாவது விஜய் தனது கட்சியின் மாவட்டச் செயலாளரை அருகில் நிற்க வைத்து உள்ளூர் பிரச்சனைகளை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மாவட்டச் செயலாளர்களிடம் பேசுகையில், அவர்களின் எண்ணமும் இதுவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications