குழம்பிப் போய் இருக்கிறார் விஜய்.. அவர் இதை செய்ய தயாரா? முடியுமா? பழ கருப்பையா கேள்வி
சென்னை: விஜய் சிலைகளுக்கு மாலை போடும் அரசியலைச் செய்ய ஆரம்பித்தால் வருடம் முழுக்க அந்த வேலையை மட்டுமே செய்ய நேரம் போதாது என்று மூத்த அரசியல்வாதி பழ கருப்பையா தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் தலையாய பிரச்சினையாக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருவது என்ன தெரியுமா? விஜய் பெரியாருக்கு மாலை போட்ட விவகாரம்தான். அவர் பெரியார் திடல் போன உடனேயே முதல் நபராக அவரைப் பாராட்டிப் பேசி இருக்கிறார் திருமாவளவன். கூடவே திராவிட அரசியல் ஆதரவாளர்கள் விஜய்யை அரவணைக்கப் பார்க்கிறார்கள். பெரியார் திடல் வரை போன விஜய் அங்கே மாலை போட்டுவிட்டுத் திரும்பிவிட்டார். அந்தத் திடலில் மூத்த அரசியல் தலைவராக கி.வீரமணி இருக்கிறார். அவரை சந்திக்க விஜய் விரும்பியதாகத் தெரியவில்லை. பொதுவாகத் திடலுக்குச் செல்கின்றவர்கள் வீரமணியையும் மரியாதை நிமித்தமாகச் சந்திப்பது வழக்கம். அதை ஏன் விஜய் செய்யவில்லை என்பதும் ஒரு கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.

அதற்குள் உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பெரியாரைப் பேசாமல் இங்கே யாரும் அரசியல் செய்ய முடியாது என்றும் கூறி இருக்கிறார். விஜய் இதற்கு முன் பெரியாரை ஆதரித்துப் பேசியதற்கு ஆதாரம் ஒன்று இல்லை. அவர் கட்சியின் அலுவலகத்தில் உள்ள பலகையில் எந்தத் தலைவர்களின் படமும் இல்லை. அவர் கட்சியின் லெட்டர் பேட்டில் கூட அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட எந்தத் தலைவர்களின் படமும் இல்லை.
இப்படியான ஒரு குழப்ப நிலையில்தான் அவர் திடீரென்று பெரியாருக்கு மாலை அணிவித்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்துப் பேசிய மூத்த அரசியல்வாதியும் நடிகருமான பழ கருப்பையா சில யோசனைகளை விஜய்க்கு வழங்கி இருக்கிறார். அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை விளக்கிவிட்டு இதை அவர் சொல்லி இருக்கிறார்.
பழ கருப்பையா அளித்துள்ள பேட்டியில், "விஜய் செய்வது எல்லாம் அடையாள அரசியல்போல தெரிகிறது. இதுவரை தமிழ்நாட்டுப் பிரச்சினை பற்றி அவர் ஒன்றுமே சொன்னதில்லை. அவர் ஏன் கட்சி ஆரம்பித்தார்? அதற்கான தேவை இப்போது என்ன இருக்கிறது? நான் என்ன செய்ய இருக்கிறேன்? இப்படி எதற்குமே அவர் பதில் சொன்னதில்லை. திமுகவை எதிர்த்து கட்சி நடத்துவது ஒன்றும் எளிதல்ல. காவல்துறையை வைத்து 32 கேள்விகளைக் கேட்டு மாநாட்டை முடக்கிவிட்டதே திமுக? 25 தேதி மாநாட்டை நடத்த முடியும் என்று தோன்றவில்லை. அடுத்துப் போனால் இன்னும் 62 கேள்வி கேட்பான்.
விஜய் எதிர்க்கக் கூடிய திமுக 50 ஆண்டுகளாக அரசியல் அதிகாரத்தில் இருக்கும் கட்சி. இந்தக் கட்சி பெரும் பணம் வைத்துள்ளது. அதை எதிர்க்க வலிமையோடு ஒருவர் இருக்க வேண்டும். அந்த வலிமை அல்லது கொள்கை விஜய்யிடம் இருக்கிறதா என்பதே தெரியவில்லையே? பெரியார் சிலைக்கு மாஐ போடுகிறார். இப்படியே முத்துராமலிங்கத் தேவர், கயிதே மில்லத் என வரிசையாக மாலை போட ஆரம்பித்தால் அதுவே பெரிய வேலையாக இருக்கும்.

பெரியாருக்கு மாலை போட்டால், உடனே பெரியாரை பின்பற்றுகின்றவர்கள் விஜய் ஓட்டுப்போட்டுவிடமாட்டார்கள். பெரியாரைப் பின்பற்றுகிறவர்கள் கடவுள் மறுப்பாளர்கள். பிராமண எதிர்ப்பாளர்கள். பெரியார் பக்கம் விஜய் போனதால் 3% பிராமண வாக்குகளை அவர் இழக்கப் போகிறார். பெரியாருக்கு விஜய் மாலை போட்டவுடன் தமிழிசை எதிர்க்கிறார். திராவிட சாயலை இன்னொரு கட்சி தேவையில்லை என்கிறார்.
இந்த மாதிரி அடையாள அரசியலுக்குள் போனால், நீங்கள் ஏன் அங்கே பொட்டு வைத்து இருந்தீர்கள்? இங்கே ஏன் பொட்டு இல்லாமல் இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழத்தான் செய்யும். ஒரு நிலையான கொள்கை வேண்டாமா எனக் கேட்பார்கள். எனவே போகவேண்டிய இடம் பெரியார் திடல் அல்ல.
இதை எல்லாம் விட்டுவிட்டு அவர் வேங்கை வயலுக்குப் போய் மக்களைப் பார்க்கவேண்டும். உங்களுக்குப் பின்னால் நான் இருக்கிறேன் என்று அவர் சொல்லிவிட்டு வரவேண்டும். அதுதான் அரசியல். எனவே விஜய்க்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அண்ணா காலத்துக் கொள்கை வேறு. சோஷலிச கொள்கை காணாமல் போய்விட்டது. மார்க்கெட் எக்னாமிக் இன்று நாட்டை ஆண்டு கொண்டுள்ளது. காலத்திற்கு ஏற்ப கொள்கைகள் வேறுபடும். அதை விஜய் உணர வேண்டும்.
விஜய் நல்ல அரசியலைச் செய்ய வேண்டும் என்ற நினைப்போடு கட்சி ஆரம்பித்திருந்தார் ஊழல் செய்யும் எண்ணத்துடன் இருக்கும் யாரும் என்னைப் பின்பற்ற வேண்டாம். என் கட்சிக்கு வரவேண்டாம் என வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அதைச் சொன்னால் மக்கள் இவரைத் திரும்பிப் பார்ப்பார்கள். இப்படிப் பேச ஒருவர் வந்திருக்கிறாரே என்று நம்பிக்கை பெறுவார்கள்" என்கிறார்.












Click it and Unblock the Notifications