2024 தேர்தலுக்கு டார்கெட்.. பக்கா பிளான் போட்ட விஜய்.. ஐடி விங் ஆலோசனை கூட்டம்.. தேதி குறிச்சாச்சு!
சென்னை: நடிகர் விஜய் தனது ஐடி விங்கை வலுப்படுத்தும் விதமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வரும் சனிக்கிழமை முக்கிய ஆலோசனை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேரடியாக அரசியலில் களமிறங்குவதாக விஜய் அறிவிக்காவிட்டாலும், கடந்த ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் பெயரில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் விஜய். தொடர்ந்து, நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேச பயணம் வேகமெடுத்து வருகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் அண்மையில் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விஜய்யுடன் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது.
கடந்த ஜூன் 17ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளையும், அவர்களின் பெற்றோர்களையும் நேரில் சந்தித்து ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார் நடிகர் விஜய்.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி விஜய் மக்கள் இயக்க அலுவலகம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. அப்போது அமைப்பு ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
கல்வி உதவி விழா, நலத்திட்ட உதவிகள், மாலை நேர படிப்பகங்கள், வழக்கறிஞர் அணி போன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் விஜௌ, நாடாளுமன்ற தேர்தலின் போதே கட்சி துவங்கி தேர்தலை சந்திக்கவுள்ளார் என்ற பேச்சு நிலவி வருகிறது. அந்தவகையில், தற்போது ஐடி விங்கை பலப்படுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுத்துள்ள அழைப்பில், "மக்கள் இயக்க செயல்பாடுகளை சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வாயிலாக மாவட்டம், இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, வர்த்தக அணி, விவசாய அணி, தொழிற்சங்க அணி, ஊடக அணி மற்றும் நகரம், ஒன்றியம், வார்டு, பகுதி, கிளை, பூத் கமிட்டி உறுப்பினர் வரை செயல்வீரர்களாக செயல்படுவது குறித்தான (IT Wing) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
வருகின்ற சனிக்கிழமை (26.08.2023) அன்று காலை 8.55 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிக்காக பரிந்துரை செய்த மூன்று (IT Wing) நபர்களை தவறாமல் தங்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து வந்து கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் உத்தரவின் பேரில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் ஐ.டி பிரிவை சேர்ந்த சுமார் 1000 பேர் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. விஜய் தனது அரசியல் பிரவேசத்திற்கான ஆயுத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், ஐடி விங் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.











Click it and Unblock the Notifications