Senthil Balaji Vs Vijay: செந்தில் பாலாஜியுடன் மோதும் விஜய்? அப்போ வீரப்பாண்டி?
சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் விஜய், ஜோதிடரின் அறிவுரைப்படி "வி" என தொடங்கும் 9 தொகுதிகளில் ஒரு தொகுதியிலோ அல்லது இரு தொகுதிகளிலோ போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் அவரை கரூரில் போட்டியிடுமாறு கட்சியினர் அறிவுறுத்தி வருகிறார்களாம்.
நாளையத் தீர்ப்பில் இருந்து நடித்து வரும் விஜய், ஆரம்பத்தில் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் நடித்து வந்தாலும், அவர் நடித்த விக்ரமன் இயக்கிய "பூவே உனக்காக" எனும் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதனால் அடுத்தடுத்து அவர் மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து வந்தார். இதைத் தொடர்ந்து அவர் தனக்கென ரசிகர்களை பெற்றார். "இளைய தளபதி" என பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு வந்தார்.
விஜய் நல்ல நடிகர் மட்டுமில்லை, நன்றாக நடனமாடுவார், பாடவும் செய்வார். இவர் பாடிய பாடல்கள் ஹிட்டடித்தன. தாய் ஷோபாவும் இவரும் சேர்ந்து ஒரு "தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா.." என்ற பாடலை பாடியிருந்தனர்.
இப்படி ஆரம்பத்திலிருந்தே கஷ்டப்பட்டு ஒரு உயரத்தை அடைந்த விஜய், தற்போது முன்னணி கதாநாயகன். ஒரு படத்திற்கு ரூ 100 முதல் 150 கோடி வரை ஊதியம் பெறுகிறார். தென்னிந்தியாவில் ஷூட்டிங் என்றால் இவரை காண ஏராளமான ரசிகர்கள் கூடி விடுகிறார்கள்.
ஒருமுறை நெய்வேலியில் ஷூட்டிங் எடுத்த போது கூட ஏராளமான ரசிகர்கள் கூடியதை அறிந்த விஜய், வெளியே வந்து ஒரு பேருந்தின் மீது ஏறி செல்பி எடுத்து அவர்களை மகிழ்வித்தார்.
இப்படி விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு சினிமாவில் ஆதரவு கொடுத்தது போல் அரசியலிலும் ஆதரவு அலை வீசுகிறது. விஜய் எந்த பொதுக் கூட்டம், மாநாடு, தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றாலும் ரசிகர்கள் அலை அலையாக வருகிறார்கள்.
விஜய்தான் அடுத்த முதல்வர் என முழக்கங்களை இடுகிறார்கள். அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதலில் விஜய் மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் போட்டியிடுவார் என பேசப்பட்டது.
இந்த நிலையில் விஜய் தனது குடும்ப ஜோதிடரின் அறிவுரையின் பேரில் செயல்படுவதாக சொல்லப்படுகிறது. அவர் விஜய்யின் ஜாதகத்தை வைத்து பார்த்து, "வி" என தொடங்கும் தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அந்த வகையில் வில்லிவாக்கம், விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, விருத்தாசலம், வீரபாண்டி, விராலிமலை, விருதுநகர், விளாத்திகுளம், விளவங்கோடு ஆகிய 9 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாம். இந்த தொகுதிகளில் ரகசிய சர்வே எடுக்கப்படுகிறதாம்.
இந்த நிலையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய விஜய் கடந்த 27ஆம் தேதி சென்ற போது அவரைப் பார்க்க ஏராளமானோர் கூடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர்.
இது விஜய்க்கு ஒரு கரும்புள்ளி போல் ஏற்பட்டுவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் 41 பேரின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசிய போது அவர் மீது யாருமே கோபப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் விஜய்க்குதான் அந்த குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்தனராம்.
இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் மீது யாருக்கும் வெறுப்பு ஏற்படவில்லை என்பதால் விஜய் கரூர் மக்களின் நலனுக்காக அங்கு போட்டியிட வேண்டும் என கட்சியினரும் மூத்த நிர்வாகிகளும் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளனராம்.
கரூர் செந்தில் பாலாஜியின் கோட்டை. அங்கு விஜய்யால் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை மோதித்தான் பார்ப்போம் என கரூரிலும் போட்டியிடுவாரா என தெரியவில்லை. கரூரிலும் போட்டியிட்டு கைவசம் மற்றொரு தொகுதியிலும் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications