விஜய் கைக்கு போன கெட்ட செய்தி.. ரிப்போர்ட் பார்த்ததும் பதறிட்டாராமே.. அப்போ எடப்பாடி வேண்டாம்?
சென்னை: தமிழகத்தின் அரசியல் கணக்குகளை மாற்றியமைக்கும் புதிய சக்தியாக கடந்த மாதம் வரை பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், தற்போது தனது முதல் பெரிய பொது நெருக்கடியைச் சந்தித்துள்ளது. கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த விஜய்யின் பேரணி, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகத்தில் முடிந்தது. உயிரிழந்தவர்களில் பலர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய்க்கு அரசியல் கூட்டணி ரீதியாக கெட்ட செய்தி ஒன்று சென்றுள்ளதாம்.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டமைப்பு (Women's Safety and Gender Justice Collective) என்ற சிவில் சமூக அமைப்பின் 'உண்மை கண்டறியும் குழு' கரூரில் நடந்த கூட்ட நெரிசலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தையும் (TVK) விஜய்யையும் முதன்மையாக பொறுப்பாக்கியுள்ளது. இவர்கள் முறையாக திட்டமிடாமல் போனதே சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

விஜய் பேரணி நடக்கும் இடத்திற்கு தாமதமாக வந்தது கூட்டத்தை அதிகரிக்கவே.. அதுவே இந்த விபத்திற்கு காரணம் என்றும் இக்குழு குற்றம் சாட்டியது. இதனால் கூட்டம் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
அஜய் ரஸ்தோகி விஜய்
கரூர் சம்பவம் தொடர்பாக அக்டோபர் 13 அன்று, உச்ச நீதிமன்றம் மத்திய புலனாய்வுத் துறை (CBI) விசாரணைக்கு உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. சிபிஐ குழு தற்போது இவ்வழக்கில் ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது.
ஆளும் திமுக தலைவர்கள் மற்றும் சில அரசியல் விமர்சகர்கள் நீதிபதி ரஸ்தோகி நியமனத்தை ஏற்கனவே கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். இந்த விவகாரத்தை சிபிஐ மூலம் பாஜக நிர்வகிக்க முயல்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்னொரு பக்கம் அஜய் ரஸ்தோகி டீமை விஜய் தரப்பு சந்திக்க உள்ளது.
விஜய்க்கு போன கெட்ட செய்தி
இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில், திமுகவிற்கு நெருக்கமானதாக கருதப்படும் ஒரு அமைப்பு நடத்திய மாநில அளவிலான ஆய்வு, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலையை வெளிப்படுத்தியுள்ளது. அக்டோபர் 1 முதல் 9 வரை 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது என்பதையும், மொத்த வாக்கு சதவீதத்தில் 45-50 சதவீதம் பெற்றுள்ளது என்பதையும் காட்டுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் தனியாகப் போட்டியிட்டால் சுமார் 20-23 சதவீத வாக்குகளைப் பெற முடியும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. அதிமுக - பாஜக - தவெக இடையே கூட்டணி வந்தாலும் அது விஜய்க்கு சாதகமாக இருக்காது.. ஆளும் திமுகவிற்கே சாதகமாக இருக்கும் என்று வெளியான சர்வே ஒன்று தமிழக வெற்றிக் கழகம் தரப்பை யோசிக்க வைத்துள்ளதாம். என்டிஏ கூட்டணியில் இணையலாமா? அல்லது தனியாகவே நிற்கலாமா? என்று விஜய் தீவிர ஆலோசனை செய்து வருகிறாராம். இந்த சர்வே ரிப்போர்ட் பார்த்து விஜய் கொஞ்சம் பதறிவிட்டாராம்.
விஜய் - அதிமுக இடையே கூட்டணி அமைவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது. அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார்.
யோசிக்கும் விஜய்
அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டால் 23 சதவீத வாக்குகளைப் பெறும் என திமுக தரப்பு நடத்திய உட்கட்சி சர்வே கணித்துள்ளது. இந்த ஆய்வின்படி, தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வலுவான ஆதரவு இருப்பதும், திமுக-வுக்கு ஒரு முக்கிய போட்டியாளராக அந்த கட்சி மாறக்கூடும் என்பதும் தெரிய வந்துள்ளது. 2.91 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 1,245 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் தவெக ஆகிய கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தால், திமுக 50 சதவீத வாக்குகளையும், என்.டி.ஏ 35 சதவீத வாக்குகளையும், சீமானின் நாம் தமிழர் கட்சி (என்.டி.கே) 12 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 3 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என இந்த ரகசிய ஆய்வு குறிப்பிடுகிறது.
பா.ஜ.க, அ.தி.மு.க, தமிழக வெற்றிக் கழகம் இணைந்து 35 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், அ.தி.மு.க-வில் உள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை தமிழக வாக்காளர்கள் எதிர்க்கும் போக்கு ஆகியவை இக்கூட்டணியின் வளர்ச்சியைத் தடுக்கலாம் என்றும் சர்வே கூறுகிறது.
தமிழக வெற்றிக் கழக தனித்துப் போட்டியிடும் சூழ்நிலையில், திமுக-வின் வாக்கு சதவீதம் 45 ஆக குறையலாம். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி 22 சதவீத வாக்குகளையும், விஜயின் கட்சி 23 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சியின் ஆதரவு 5 சதவீதமாகக் குறையக்கூடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இணையலாமா அல்லது தனித்து நிற்கலாமா.. எடப்பாடிக்கு உண்மையில் மக்கள் ஆதரவு உள்ளதா என்ற சந்தேகத்தில் விஜய் உள்ளாராம்.












Click it and Unblock the Notifications