நீதிமன்றத்துக்கு ஒருவரின் பெயரைச் சூட்ட முடியுமா? விஜய் வாக்குறுதியை விளாசும் இடும்பாவனம் கார்த்திக்
சென்னை: பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க அஞ்சலையம்மாள் பெயரில் அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைப்போம் என்ற தவெக தலைவர் விஜய் அறிவிப்புக்கு நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி பதிலடி கொடுத்துள்ளார். நீதிமன்றத்துக்கு ஒருவரின் பெயரைச் சூட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ள இடும்பாவனம் கார்த்தி, இந்தியாவில் எந்த நீதிமன்றத்துக்காவது எவரின் பெயரையாவது சூட்டி இருக்கிறார்களா என்றும் சாடி இருக்கிறார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தவெக சார்பாக நேற்று மாலை மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய், மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் திட்டங்களை அறிவித்தார். பெரும்பாலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை அப்டேட் செய்தே அந்த வாக்குறுதிகள் அமைந்துள்ளன.

அதன்படி, மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகை ரூ.2,500ஆக உயர்த்தப்படும் என்றும், அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும், அண்ணன் சீர் திட்டம் மூலமாக பெண்கள் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், பட்டு சேலை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதன்பின், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்குவதற்கு அஞ்சலையம்மாள் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு விமர்சனத்தை பெற்றுள்ளது. ஏனென்றால் விஜய் இந்த வாக்குறுதியை அளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆண் நண்பருடன் இரவில் பேசிக் கொண்டிருந்த கோவை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணை தொடங்கப்பட்டு, பிப்ரவரி 23ஆம் தேதி முடிக்கப்பட்டு, அடுத்த 2 வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் தரப்பில் ஒரு விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.
அதில் இடும்பாவனம் கார்த்திக், அஞ்சலையம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் அமைப்போம் என்கிறார் பக்கா மாஸ் தலைவர். நீதிமன்றத்துக்கு ஒருவரின் பெயரைச் சூட்ட முடியுமா? இந்தியாவில் எந்த நீதிமன்றத்துக்காவது எவரின் பெயரையாவது சூட்டி இருக்கிறார்களா? எப்பா.. சாமி.. முடியல..! என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு தவெக தொண்டர்கள் தரப்பில் அஞ்சலையம்மாள் பெயரிலான திட்டத்தில் இந்த அதிவிரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று பதில் அளித்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நீதிமன்றங்களுக்கு யாரின் பெயரும் சூட்டப்பட்டதே கிடையாது. இதனால் விஜய்யின் அறிவிப்பு விமர்சனமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications