கூட்டணியில் விரிசல்? சல்லி சல்லியாய் நொறுக்கிய திருச்சி சிவா.. ராகுலுடன் கைகுலுக்கும் தவெக விஜய்?
சென்னை: திமுக கூட்டணி மிக வலுவாக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவந்த நிலையில் அதில் விரிசல் விழுவது போல பேசி இருக்கிறார் திருச்சி சிவா எம்பி. காமராஜர் குறித்து அவரது பேச்சுக்கு வேலுச்சாமி, எம்பிக்கள் ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக - அதிமுக அல்லாத கூட்டணிக்கு திட்டம் போட்டு வந்த விஜய், ராகுலுடன் கைகோர்க்க திட்டமிட்டு இருக்கிறார். மேலும் அன்புமணியும் இந்த கூட்டணியில் இணையலாம் எனக் கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் பிரச்சாரத்தை தீவிர படுத்தியிருக்கின்றன. திமுக கூட்டணி மிக வலுவாக இருக்கிறது என கூறி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின்.
இது ஒரு புறம் இருக்க திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை மதிப்பதில்லை. தங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அந்த அழைப்பை அவர்கள் புறக்கணித்துள்ளனர்.

இதற்கிடையே திமுக கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, காமராஜர் குறித்து அவதூறாக பேசியதாக கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. அவரது பேச்சுக்கு பல்வேறு கட்ட தலைவர்களும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக திருச்சி வேலுச்சாமி, கரூர் எம்பி ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் திமுக அதிமுக அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்கி வெற்றி பெற வேண்டும் என்ற விஜயின் கணக்கு பலிக்க ஒரு வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூறிவரும் நிலையில் அதற்கு சம்மதம் என தனது முதல் மாநில மாநாட்டிலேயே தெரிவித்து இருந்தார் விஜய். தற்போதைய அரசியல் சூழலில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என கூறிவரும் காங்கிரஸ், திமுகவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது. மேலும் திருச்சி சிவா எம்பியின் வீட்டை முற்றுகையிடவும் முயன்றிருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர். இதனால் பரபரப்பான சூழல் எழுந்து வரும் நிலையில் தமிழகத்தில் மூன்றாவது கூட்டணிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
நேற்று பாமகவின் 37-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ், ஆட்சி அதிகாரத்தில் பாமக பங்கேற்கும் எனக் கூறியிருந்தார். மேலும் அடுத்த ஆட்சியில் காங்கிரஸ் சார்பில் இருந்து அமைச்சர்கள் இருப்பார்கள் என்ன திருச்சி வேலுச்சாமி கூறிய நிலையில் அதனை தான் வரவேற்கிறேன் என கூறி இருக்கிறார் காங்கிரஸ் கமிட்டி தமிழக தலைவர் செல்வ பெருந்தகை.
இந்த நிலையில் ராகுல் காந்தியை விஜய் விரைவில் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராகுல் காந்தியுடன் நட்பில் இருந்த விஜய் பிறகு விலகிக் கொண்ட நிலையில் தமிழகத்தின் மூன்றாவது அரசியல் சக்தியாக தான் உருவாக வேண்டும் என்றால், தேசிய அளவிலான ஒரு கட்சியின் ஆதரவு தேவை என நினைக்கிறார் விஜய்.
பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்துவிட்டதால் அந்த கட்சியுடன் கைகோர்க்க முடியாது. அதே நேரத்தில் ராகுல் காந்தியுடன் சேரும்போது தனது கூட்டணிக்கும் பலம் வரும், தேசிய அளவில் தான் ஒரு தலைவராக உருவெடுக்க முடியும் என நினைக்கிறார் விஜய். இதை அடுத்து ராகுல் காந்தியை விஜய் சந்திப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. அதற்கேற்றார் போல் தமிழக அரசியலில் புயல் வீச தொடங்கி இருக்கும் நிலையில், விஜயின் கணக்கு பலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications