கரூர் துயரத்திற்கு பிறகு விஜய்க்கு வந்த வைராக்கியம்! திமுகவை வீழ்த்த தவெகவுக்கு புது அசைன்மென்ட்
சென்னை: கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் தனது கூட்டணி நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக கட்சி நிர்வாகிகளிடம் விஜய் ஒரு புதிய அசைன்மென்ட்டையும் கொடுத்துள்ளாராம். அப்படி என்னதான் அவர் முடிவு எடுத்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

தமிழக சட்டசபைக்கு 2026-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் கூட்டணி பேரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தனது விக்கிரவாண்டி மாநாட்டிலேயே தனது தலைமையில்தான் கூட்டணி, தான்தான் முதல்வர் வேட்பாளர் என தெளிவாக கூறிவிட்டார். மேலும் தன்னுடன் கூட்டணிக்கு வருவோர் வரலாம். ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்றும் தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே ஆட்சியில் பங்கு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டு வந்த நிலையில் விஜய் அவர்களுக்கு ஒரு சிக்னல் கொடுத்தது போல் இருந்தது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம், விஜய்யுடன் கூட்டணி குறித்து கேட்ட போதெல்லாம் அவரோ திமுக கூட்டணியில் வலிமையாக இருக்கிறோம், உறுதியாக இருக்கிறோம் என கூறி வருகிறார்.
இந்த நிலையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது விஜய்க்கு கரும்புள்ளி போல் ஆகிவிட்டது.
அதிலும் அவர் சம்பவம் நடந்ததும் மக்களுடன் இருக்காமல் அங்கிருந்து சென்னை வந்துவிட்டார். இதுவும் அவருக்கு கடும் விமர்சனங்களை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும் விஜய் குறித்து திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், ஐடி விங் என பல தரப்பினரும் விமர்சிக்கத் தொடங்கினர்.
சம்பவம் நடந்ததும் அந்த இடத்தை விட்டு தப்பியோடி வந்துவிட்டார் என்றெல்லாம் பேசி வந்தனர். அதிலும் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் குழு போடப்பட்டது. மேலும் உயர்நீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கில் கூட நீதிபதி செந்தில் குமார், விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார்.
சுருக்கமாக சொன்னால் விஜய்யை இந்த விவகாரத்தில் சரியாக சிக்க வைக்க திமுக தீவிரம் காட்டியதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர். தன்னை திமுக விமர்சிப்பதை அறிந்த விஜய் திமுக எதிர்ப்பில் மேலும் உறுதியாகவிட்டாராம்.
வரும் தேர்தலில் திமுகவை எப்படியாவது வீழ்த்தணும் என்பதற்காக காங்கிரஸ், விசிகவை தனது கூட்டணிக்குள் இழுக்கும் புதிய அசைன்மென்ட்டை தனது கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் கொடுத்துள்ளாராம்.
அதில் முதல் படியாக கரூருக்கு வரும் ராகுல் காந்தியை விஜய் சந்திக்கிறாராம். அப்போது கூட்டணி குறித்து பேசப்படும் என தெரிகிறது. கரூர் சம்பவம் நடந்த போது உடனடியாக ராகுல் காந்தி, விஜய்க்கு போன் செய்து ஆறுதல் தெரிவித்தார்.
அது போல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தற்போது வலுவாக எழுப்பி வருகிறது. அதிலும் 4 அமைச்சர் பதவி வேண்டும் என்றும் கேட்கிறதாம். ஆனால் திமுக ஆட்சியில் பங்கு என்ற முன்னெடுப்பை எடுக்காது.
இதனால் காங்கிரஸ் தவெகவுடன் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவிடம் சீட் பேரத்தை உயர்த்தவே இது போன்ற நாடகத்தை காங்கிரஸ் போடுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். கூடுமானவரை தங்களுக்கான டிமாண்ட்டை ஏற்றிவிடுவதுதான் காங்கிரஸின் வழக்கம் என்றும் அவர்கள் சொல்லியுள்ளனர்.
எனவே திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வரவே வராது என்கிறார்கள். விசிகவும் திமுக கூட்டணியை விட்டு வராது என கூறியுள்ள நிலையில் விஜய் கொடுத்த புது அசைன்மென்ட் எப்படி சக்ஸஸ் ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு வேளை திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விசிக வெளியேறுமா என்ற ஆங்கிளும் உள்ளது. ஆனால் பாமகவுக்காக விசிகவை திமுக கைவிடாது என்கிறார்கள். தொல் திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினின் குட் வில் புக்கில் இடம்பெற்றுள்ளதால் இது போன்று நடக்க வாய்ப்பில்லை. எனினும் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை முறியடிக்க திருமாவளவனை முதல்வர் ஸ்டாலின் சமாதானம் செய்யும் முயற்சியை எடுத்தாலும் எடுக்கலாம் என்கிறார்கள். ஆனால் அதற்கு திருமா இசைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications