சனிக்கிழமை வரப் போகுது.. விஜய் வர்றாரு! ரெடியாகும் நாகை, திருவாரூர்! ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட போலீஸ்
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் வரும் சனிக்கிழமை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கடந்த வாரம் திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நாகை மற்றும் திருவாரூரில் விஜயின் பிரச்சாரத்திற்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வாரம் மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்த விஜய் இந்த வாரம் இரண்டு மாவட்டங்களில் மட்டும் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் சனிக்கிழமை திருச்சியில் முதன்முறையாக விஜய் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார்.
திருச்சி நகருக்குள் உள்ள மரக்கடை பகுதியில் விஜய் பேசிய போது தொழில்நுட்பக் கோளாறால் மைக் வேலை செய்யவில்லை. இதனால் தனது பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்டு விஜய் கிளம்பினார். ஆனால் மணிக்கணக்கில் விஜயின் பேச்சைக் கேட்க அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

விஜய் பிரச்சாரம்
தொடர்ந்து இரவில் அரியலூரில் பிரச்சாரம் செய்தார் விஜய். இதற்கிடையே நேரமின்மை காரணமாக பெரம்பலூரில் விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இது அம்மாவட்ட நிர்வாகிகளைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ஞாயிறு காலையில் விஜயைக் கண்டித்துப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. முன்னதாக திருச்சி பிரச்சாரத்திற்காக விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி வந்த விஜய் விமான நிலையத்திலிருந்து மரக்கடை பகுதிக்குச் செல்லவே 5 மணி நேரத்திற்கு மேலானது. இதனால் திருச்சி நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.
தவெக கூட்டம்
அதுமட்டுமல்லாமல் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர்கள் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக போலீசாரும் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். பிரச்சாரத்தின் முதல் நாளிலேயே இப்படி சொதப்பியதால் விஜய் கடும் அதிருப்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதை அடுத்து இந்த வாரம் இரண்டு மாவட்டங்களில் மட்டும் விஜய் பிரச்சாரம் செய்கிறார். அதன்படி நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை விஜய் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாகை கட்டுப்பாடு
நாகை நகருக்குள் விஜய் வரக்கூடாது, ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் விஜயின் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நாகை பிரச்சாரத்தை முடித்ததும் அடுத்ததாக திருவாரூர் செல்கிறார். இது ஒருபுறம் இருக்க, அடுத்தடுத்து தென் மாவட்டப் பயணத்தை விஜய் தொடங்க இருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தூத்துக்குடியில் விஜய் பிரச்சாரம் செய்ய இருக்கும் நிலையில் காவல்துறையினர் தமிழக வெற்றிக் கழகத்தினருக்குக் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
காவல்துறை எச்சரிக்கை
விஜய் வரும்போது தொண்டர்கள் எந்தவித அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது. பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு இடையே திருச்சியில் நடந்தது போல எந்தவித அசௌகரியங்களும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடாது எனவும் அதற்கேற்றாற்போல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என விஜய் அறிவுறுத்திய நிலையில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications