நீலாங்கரை வீட்டை மாற்றுகிறாரா விஜய்? முதல்வராக பதவியேற்ற உடன் நடக்கும் முதல் 'சேஞ்ச்ஓவர்'!
தமிழ்நாடு முதலமைச்சர் பதவி என்பது பெரும் பொறுப்புகளுடன் கூடிய உயர் பதவி. இந்தப் பதவியை ஏற்கும் தலைவருக்கு அரசு சார்பில் பல முக்கிய வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் முதல்வரின் அன்றாடப் பணிகளை சுமுகமாக நடத்தவும், அவரது பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவுகின்றன.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்த தவெக கட்சி தலைவவர் விஜய் முதல்வராக நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் இதேவேளையில், விஜய் 10 இடங்களுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஒருப்பக்கம் பாமக, காங்கிரஸ் ரெடியா ஆனாலும், அதிமுக கட்சியில் தற்போது பெரும் பிளவு ஏற்பட்டு உள்ளது.

10 வருடமாக ஆட்சியில் இல்லாத அதிமுக, தவெக உடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வரும் திட்டத்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆனால் அதிமுக கட்சிக்குள் இந்த முடிவுக்கு கலவையான சூழ்நிலை மனநிலை இருக்கும் காரணத்தால் இழுபறி நீடிக்கிறது.
இந்த நிலையில் முதல் முறையாக தேர்தல் கண்டு, முதல்வராகும் விஜய்-யின் சம்பளம், அரசு தரும் சலுகைகள் குறித்த விபரங்கள் தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
கிரீன்வேஸ் சாலையில் அரசு பங்களா
தமிழ்நாடு அரசு முதலமைச்சருக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் அரசு பங்களா ஒதுக்கப்படுகிறது. இந்த வீட்டுக்கு எந்த வாடகையும் செலுத்த வேண்டியதில்லை. வீட்டின் பராமரிப்பு, மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசே முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. இது முதல்வரின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்கள் சொந்த வீடுகளிலேயே தங்கியிருந்துள்ளனர். இருப்பினும், அந்த சொந்த வீடுகளும் 'முதல்வரின் இல்லம்' என்ற பெயரில் அரசு சார்பில் தொடர்ந்து பராமரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் விஜய் தனது நீலாங்கரை வீட்டிலேயே இருப்பாரா அல்லது கிரீன்வேஸ் சாலை வீட்டுக்கு இடம் மாறுவாரா என்பது முதல்வர் பொறுப்பேற்ற உடன் தெரியும்.
ஆனால் விஜயின் நீலாங்கரை வீடு முதல் தலைமைச் செயலகம் வரையிலான தூரம் மிகவும் அதிகம். கிட்டத்தட்ட 18 - 19 கிலோமீட்டர். ஈசிஆர் வழியாக வந்தால் நீலாங்கரை - பாலவாக்கம் - திருவான்மியூர் - அடையாறு - சாந்தோம் - காமராஜர் சாலை - தலைமைச் செயலகம் என 18-19 கிலோமீட்டர் தொலைவு, இப்பாதைக்கு போலீஸ் பாதுகாப்பு, டிராபிக் பராமரிப்பு என தினசரி பயணத்திற்கு பெரும் இடையூராக இருக்கும்.
ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலை வீட்டிற்கும் தலைமைச் செயலகத்திற்கு 7-8 கிலோமீட்டர், கலைஞரின் கோபாலபுரம் வீட்டில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு 4-5 கிலோமீட்டர் மட்டுமே. நீண்ட தூரத்திற்கு போலீஸ் பாதுகாப்பு, டிராபிக் பராமரிப்பு செய்வது மூலம் மக்களின் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கும். இதேபோல் விஜயின் பயண நேரம் அதிகரிக்கும்.
மூன்று சிறப்பு வாகனங்கள், பெட்ரோல் படி
முதலமைச்சருக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் மிக முக்கியம். குண்டு துளைக்காத சிறப்பு கார் உள்பட மொத்தம் மூன்று அதிகாரப்பூர்வ வாகனங்கள் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. இந்த வாகனங்களுக்கான எரிபொருள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் ஓட்டுநர்களின் ஊதியம் அனைத்தையும் அரசே ஏற்கிறது. மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பெட்ரோல் அலவன்ஸ் வழங்கப்படுகிறது.
பல அடுக்கு பாதுகாப்பு
முதலமைச்சரின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயம். தமிழ்நாடு காவல்துறை சார்பில் உயர் பாதுகாப்பு வழங்கப்படுவதோடு, மத்திய அரசின் சார்பில் இசட் பிளஸ் அந்தஸ்து பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது. இசட் பிளஸ் என்பது இந்தியாவில் உள்ள உயர் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்பு நிலை. மாநில காவல்துறையினர் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புப் படையினரும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
விமானப் பயணம் மற்றும் ஹெலிகாப்டர் வசதி
முதலமைச்சர் வெளி மாநிலங்கள் அல்லது வெளியூர்களுக்கு விமானத்தில் பயணம் செய்யும்போது அந்தக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. இதற்கு முறையான படிவங்களை நிரப்பி அனுமதி பெற வேண்டும். சில சமயங்களில் இந்தக் கட்டணம் சாதாரண பயணிகளைவிட அதிகமாக இருக்கும். முதலில் தனிப்பட்ட முறையில் செலுத்திவிட்டு பின்னர் அரசிடம் திருப்பிப் பெற்றுக் கொள்ளும் முறை தான் தற்போது நடைமுறையில் உள்ளது.
மேலும், வேகமான பயணத்துக்கு தனியாக ஒரு ஹெலிகாப்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 8 பேர் வரை பயணம் செய்ய முடியும். விமானிகள் குழு, எரிபொருள், பராமரிப்புச் செலவுகள் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்கிறது. தனியார் நிறுவனத்திடம் இருந்து இந்த ஹெலிகாப்டர் மாதாந்திர வாடகைக்கு எடுக்கப்படுகிறது.
மருத்துவக் காப்பீடு, பணியாளர்கள் வசதி
முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விரிவான மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் இல்லம் மற்றும் அலுவலகம் (சி.எம்.ஓ) ஆகிய இடங்களில் நிர்வாகப் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான தனிப்படை நியமிக்கப்படுகிறது.
முதலமைச்சரின் தனிப்பட்ட ஊதியம், அலவன்ஸ், அலுவல் செலவுகள் உள்ளிட்டவற்றை தமிழக அரசின் பொதுத்துறை கவனித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் பதவிக்கு வழங்கப்படும் இந்த வசதிகள் அரசு நிர்வாகத்தை திறம்பட நடத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் முதல்வரின் பணியை எளிதாக்குவதோடு, மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்கின்றன.












Click it and Unblock the Notifications