விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியது நான் இல்லை.. தவெக நிர்வாகி மாஜி ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் விளக்கம்!
சென்னை: தவெக தலைவர் விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியது நான் இல்லை என்றும், அது தன்னுடன் பணியாற்றிய தயானந்த் என்பவர் என்று தவெக நிர்வாகி அருண் ராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். விஜய்-க்கு அரசியல் ஆசை இருந்தது தொடர்பாக முன்னதாக புரிந்து கொண்டதாக கூறிய அவர், ஐஆர்எஸ் பணியில் இருந்து விலகி அரசியலுக்கு வர வேண்டும் என்ற முடிவில் கொஞ்சம் குழப்பமில்லை என்று கூறி இருக்கிறார்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கட்சியில் ஐஆர்எஸ் முன்னாள் அதிகாரியான அருண் ராஜ் இணைந்துள்ளார். தவெக தலைவர் விஜயை சந்தித்து கட்சியில் இணைத்து கொண்ட அவருக்கு கொள்கை பரப்பு செயலாளராக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியது அருண் ராஜ் என்ற தகவல் பரவியது.

அருண் ராஜ் பேட்டி
ஆனால் செய்தியாளர் சந்திப்பில் விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியது நான் அல்ல என்று அருண் ராஜ் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் விகடன் யூட்யூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், தனிப்பட்ட முறையில் ரசிகராக இருந்து பின் நண்பராக மாறிவிட்டேன். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்பாக சில விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டோம்.
ரெய்டு நடத்தியது யார்?
அரசு ஊழியராக இருக்கும் போது என்னால் முடிந்த அளவு ஆலோசனை வழங்கினேன். என்னுடைய பணிக்கு பாதிப்பு இல்லாத வகையில் என்னால் முடிந்த உதவியை செய்தேன். அதேபோல் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டில் ஈடுபட்டது என்னுடன் பணியாற்றிய நபர் தான். அவர் பார்க்க என்னை போலவே இருப்பார். அவரின் பெயர் தயானந்த். என்னைவிட கொஞ்சம் உயரம் குறைவாக இருப்பார்.
வீடியோவில் இருந்தது யார்?
ரெய்டு நடத்தும் அதிகாரி எப்போதும் கட்டுப்பாட்டு அறையில் தான் இருப்பார். அந்த அதிகாரி தான் ஒவ்வொரு ஊழியரையும் ரெய்டு நடத்தும் நாளன்று எங்கு செல்ல வேண்டும் என்று கூறுவார். 2019ல் ஜனவரியிலேயே ஜாய்ண்ட் கமிஷனுக்கு இடம்பெயர்ந்துவிட்டேன். அதனால் விஜய் வீட்டில் ரெய்டு நடத்துவதற்கு செல்ல முடியாது. அந்த வீடியோவில் இருந்தது நான் இல்லை.
குழப்பம் இருந்ததா?
ஐடி ரெய்டில் விஜய் மீதான எந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் கண்டுபிடிக்க முடியவில்லை. விஜய் வீட்டில் ரெய்டு நடந்த போது கூட, அவர் என்னிடம் பேசவில்லை. அவர் என்னிடம் வராத போதே, எனது உதவி தேவையில்லை என்பதை புரிந்து கொண்டேன். ஐஆர்எஸ் பணியில் இருந்து அரசியலுக்கு வர வேண்டும் என்ற முடிவில் குழப்பமே இருக்கவில்லை.
விஜய்-க்காக காத்திருந்தேன்
சிறுவயதில் இருந்தே பொது வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே அரசியல் ஆசை இருந்தது. சாமானிய மக்களிடம் மாற்றம் வராதா என்ற எண்ணம் இருக்கிறது. அந்த மாற்றத்தை விஜய் கொடுத்துள்ளார். விஜய்-க்கு அரசியல் ஆசை இருந்தது கொஞ்சம் முன்பாகவே புரிந்து கொண்டேன். அதனால் விஜய்-க்காக காத்திருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications