பிகே பக்கத்துல இருக்க.. ஆதவ் வெட்கத்துல இருக்க! புஸ்ஸி ஆனந்த் முகத்துல ஈயாடலை..எப்படி இருந்த மனுஷன்!
சென்னை: கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய தூணாக விளங்கியவர் புஸ்ஸி ஆனந்த். ஒரே ஒரு ஆடியோவால் அவர் நெருக்கடிக்கு உள்ளான நிலையில் தற்போது கிட்டத்தட்ட ஓரம் கட்டப்பட்டு விட்டதாகவே கூறுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள். மேலும் இன்றைய நிகழ்ச்சியால் மேலும் அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை அருகே கோலாகலமாக நடைபெற்றது. கட்சியின் முதல் மாநாட்டை போல மிகப் பிரம்மாண்டமாக நடத்தவில்லை என்றாலும் குறிப்பிட்ட சில நிர்வாகிகளுக்கு அனுமதி, பிரம்மாண்ட விருந்து என ஓரளவுக்கு மாஸாக நிகழ்ச்சியை நடத்திக் காட்டி இருக்கிறார் விஜய்.

வழக்கம் போல் இல்லாமல் இந்த நிகழ்ச்சி மேடையில் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மேடையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அது மட்டும் அல்லாமல் விஜய்க்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோர், ராஜ்மோகன், உள்ளிட்டோர் வந்தனர்.
என்ட்ரி கொடுக்கும் போது பிரசாந்த் கிஷோருடன் உள்ளே வந்தார் விஜய். கட்சிக்கு முன்னாலே வந்தாலும், இன்றைய நிகழ்ச்சியில் இவர்கள் அனைவருக்கும் பின்னாலே வந்தவர் தான் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த். விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்ட போது சந்திரசேகரிடம் இருந்து கைப்பற்றியவர் புஸ்ஸி ஆனந்த் என குற்றம் சாட்டப்படுகிறது. தொடர்ந்து சந்திரசேகர் விஜயிடம் இருந்து விலகிய நிலையில் கட்சியின் அனைத்து பணிகளையும் அவர்தான் கவனித்து வந்தார்.
விஜய்க்கு அடுத்து என்பதை விட விஜய்க்கு இணையாகவே அவரது கட்சியினர் ஆனந்தை தான் கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவரிடம் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஒரு ஆடியோ பரவியது. அது உண்மையா பொய்யா என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஆனந்த் விஜய் சொன்னால் கூட கேட்பதில்லை. விஜயை ஓரங்கட்டி தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்புகிறார். என சில கருத்துக்களை கூறியிருந்தார்.
அது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடியோ பொய்யாகக் கூட இருக்கலாம், ஆனால் அதில் இருந்த விஷயங்கள் அனைத்தும் ஒரு வகையிலும் உண்மைதான் என்கின்றனர். இதனால் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டாலும் அது குறித்து விஜயோ, ஆனந்தோ அல்லது வேறு யாருமே பேசவில்லை. இந்த நிலையில் திடீரென கட்சியில் என்ட்ரி கொடுத்தார் ஆதவ் அர்ஜுனா. அதற்குப் பிறகு ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல் குமார், தற்போது பாஜகவில் இருந்து நாச்சியார் என அடுத்தடுத்து பல பிரபலங்கள் வந்து இருக்கிறார்கள்.
மேலும் மருது அழகுராஜ் உள்ளிட்ட சிலரும் அடுத்தடுத்து கட்சியில் இணைய இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆனந்தை ஓரம் கட்டவே விஜய் இத்தனை பேரை அழைத்து வருகிறார் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக கடந்த கால மேடைகளில் முதல் ஆளாகவும் நிகழ்ச்சி முடிந்தவுடன் கடைசி ஆளாகவும் வெளியேறுபவர் ஆனந்த். ஆனால் இப்போது விஜய்க்கு அருகில் அதாவது வலப்பக்கத்தில் பிரசாந்த் கிஷோர் என்றால் இடது பக்கத்தில் ஆதவ் அர்ஜுனா என மேடை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தனர். மேலும் கடந்த முறைகளை விட இந்த முறை புஸ்ஸிஆனந்த் அவ்வளவாக மேடையில் பேசவில்லை. வெளியிலும் பேசவில்லை என்பதுதான் ஹைலைட். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் ஆனந்த் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications