பிகே போட்ட ஸ்கெட்ச்! கவனமாய் காய் நகர்த்தும் தவெக விஜய்! தொண்டர்களை குஷிப்படுத்த ’பாண்டி’ விருந்து
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தங்களது கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தை மகாபலிபுரம் அருகே பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார். முதல் ஆண்டு பொதுக் குழுவில் 3000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அவர்களுக்காக பாண்டிச்சேரியில் இருந்து சமையல் கலைஞர்கள் கமகம விருந்தை தயார் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை பிப்ரவரி மாதமே அறிவித்த நிலையில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்கள் சந்திப்பு, நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாநில மாநாடு என பிசியாக இருந்த விஜய் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கிறார்.

4 கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அவர்களை நேரில் சந்தித்து கள அரசியல் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் தனியே நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டு இருக்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற இருக்கிறது. மேலும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் என அவரது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சி ஆரம்பித்து நிலையில் முதல் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, கட்சியின் முதல் பொது குழு கூட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் அருகே பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போது நிர்வாகிகள் நியமனம், பிற கட்சியில் உள்ள முக்கிய புள்ளிகளை கட்சிக்கு இழுப்பது, தேர்தல் வியூகம் அமைப்பது என பரபரப்பாக இருக்கிறார் விஜய்.
தேர்தலுக்கு முன்பாக நிர்வாகிகளை நன்கு கவனிக்கும் வகையில் இந்த பொதுக்குழு நடக்க இருக்கிறது. பிரசாந்த் கிஷோர் தேர்தல் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரது ஏற்பாட்டின் பேரில் இந்த பொதுக்குழு நடக்க இருக்கிறது. கட்சியின் அடிப்படை கட்டமைப்பை சரி செய்துவிட்டு தன்னை தேர்தல் பணிகளுக்காக அழைக்கலாம் என பிரசாந்த் கிஷோர் கூறிய நிலையில் தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்கான நிர்வாகிகள் நியமனம் நடைபெற உள்ளது.
அவர்களை குஷிப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச்சில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. பூஞ்சேரி பகுதியில் விஜய் இதற்காக பிரம்மாண்டமாக தனியார் விடுதியை தேர்வு செய்துள்ளார். அங்கு 3000 பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பொதுக்குழு தடபுடல் விருந்துடன் நடக்க இருக்கிறது.
இதற்காக புதுச்சேரியைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கம்போல் சைவம் தான் விஜய் கட்சி நிகழ்ச்சிகளில் வழங்கப்படும். அந்த வகையில் இந்த முறையும் சைவ உணவு வழங்கப்படும் என்றாலும், காளான் பிரியாணி, பன்னீர் டிக்கா, சாம்பார், மோர் குழம்பு, மூன்று வகை பொரியல், அப்பளம், பாயாசம், வடை என அசத்த திட்டமிட்டு இருக்கிறார் விஜய். இதற்காக டன் கணக்கான அரிசியும், காய்கறிகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு ஊருக்கும் சிறப்பான உணவுகளை தேர்ந்தெடுத்து அந்த உணவையும் நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டும் என விஜய் கூறியுள்ளாராம். இதை அடுத்து மெனுவை இறுதி செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications