அன்னையர் தினத்தில் ஷோபாவுக்கு சிறந்த கிப்ட்! நாளை காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் விஜய்?
சென்னை: சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நாளை காலை 10 மணிக்கு பதவியேற்க ஆளுநரிடம் விஜய் அனுமதி கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே நேரு உள்விளையாட்டரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அறுதிப் பெரும்பான்மையுடன் முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதியாகியுள்ளது. இது குறித்த விரிவான விவரங்கள் வருமாறு:

120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை பெற்ற தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவால் 112 இடங்கள் கிடைத்தன.
நேற்றைய தினம் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்திருந்த நிலையில், இன்று மாலை விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சியின் 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை அதிகாரப்பூர்வமாகக் கடிதம் மூலம் அறிவித்தார்.
இதன் மூலம் பலம் 118 ஆக உயர்ந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) கட்சியும் தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது.
தற்போது மொத்தம் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் தவெக வலுவான நிலையில் உள்ளது. "தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையவும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம்" என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் ஏமாற்றம்
ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காகத் தலைவர் விஜய் இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.
இருப்பினும், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் இரவு 7.10 மணிக்கு கேரளா செல்லவிருந்ததால், விஜய்க்குச் சந்திப்புக்கான அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால், ஆளுநரைச் சந்திக்க முடியாமல் விஜய் ஏமாற்றத்துடன் பட்டினப்பாக்கம் இல்லத்திற்குத் திரும்பினார். இந்த நிலையில் திடீரென ஆளுநரின் கேரள பயணம் ரத்தானதை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு விஜய் சென்றார்.
நேற்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியது போல் போலி கடிதம் என சொல்லிவிடக் கூடாது என்பதற்காக விஜய் தனக்கு ஆதரவு அளித்த கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்களுடன் சென்றுள்ளார். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழாவை நடத்துமாறு விஜய், ஆளுநரிடம் கேட்டுள்ளாராம். நாளை ஞாயிற்றுக்கிழமை பகல் 12- 1.30 எமகண்டம், மாலை 4.30 - 6.00 ராகு காலம் என்பதால் 10 மணிக்கு நேரம் கேட்டிருக்கிறார்கள். விஜய்க்கு 120 பேரின் ஆதரவு கிடைத்ததால் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
நாளைய தினம் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. விஜய் முதல்வராக நாளை பதவியேற்றால் இதை விட சிறந்த கிப்ட் தாய் ஷோபாவுக்கு வேறு ஏதும் இல்லை!












Click it and Unblock the Notifications