"வெட்கமா இல்லை.. மேடைக்கு மேடை தமிழன்னு பேசினதெல்லாம் வேஷமா".. விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு!
விஜய் சேதுபதிக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது
சென்னை: "மேடைக்கு மேடை தமிழன், அன்பு, வீரம்-ன்னு பேசினது எல்லாம் வேஷம்தானா? அநேகமா இந்த படம்தான் விஜய்சேதுபதிக்கு கடைசி படமாக இருக்கும்.. காசுக்காக விலை போனவர்களை நாங்க மதிக்கவே மாட்டோம்" என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான கருத்துக்கள் எழுந்து வருகின்றன.. கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவும்,இப்படி ஒரு எதிர்ப்பு பரவலாக கிளம்பி உள்ளது.
800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ள முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீபதி என்பவர் டைரக்ட் செய்கிறார்,.. இதில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றதுமே மொத்த கோபமும் விஜய் சேதுபதி மீது திரும்பியது.. அதனால் எப்படியும் இதில் அவர் நடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதற்கான மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்புடன், பரபரப்பையும் சேர்த்து பெற்றது.
அச்சு அசல் முரளிதரன் போலவே விஜய் சேதுபதி கெட்-அப்பினை பொருத்தமாக மாற்றி உள்ளனர். இதனால் அவர் மீதான கொந்தளிப்பு கூடியுள்ளது.. இதை பற்றி ஒருசிலரிடம் நாம் கருத்து கேட்டபோது அவர்கள் சொன்னதாவது:

சிங்களர்
"இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், தமிழராக இருந்தாலும் ஒரு சிங்களராகவே வாழ்ந்து வருபவர்.. ஆனாலும் தமிழர் என்று சொல்வதில் அவமானப்படுபவர்.. விடுதலைப்புலிகள் போராடிக்கொண்டிருந்த சமயம், சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்து வருபவர்... இதைவிட கொடுமை பாதிக்கப்பட்ட தமிழ் கிராமங்களுக்கு போகாமல், சிங்கள கிராமங்களுக்கு போய் ஆறுதல் சொன்னவர்..

யுத்தம்
இவர் 2 கிராமங்களை தத்தெடுத்துள்ளார்.. அந்த கிராமங்களும் சிங்களவர்கள் வசிக்கக்கூடியதாகவே இருக்கிறது.. முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு, "அமைதியை நிலைநிறுத்திய ராஜபக்சே" என்று முரளிதரன் பாராட்டுப்பத்திரமும் தந்தவர்.. இவ்வளவும் தமிழக மக்கள் மனசில் பசுமரத்தாணியாய் பதிந்துபோய்விட்டது. சுருக்கமாக, தமிழர்களுக்கு எதிரானவர் முத்தையா என்பதுதான் தற்போதைய மக்களின் மனநிலையாக உள்ளது.

பணம்
அப்படி இருக்கும்போது, இனத்தை அழிக்க முழு உதவியும் செய்தவருடைய படத்தில் விஜய் சேதுபதி எப்படி நடிக்கலாம்? அவர் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும்? பணம் கிடைத்தால் போதும் என்று எந்த கேரக்டரில் வேண்டுமானாலும் நடிப்பதா? உணர்வுகளுக்கு மதிப்பில்லையா? கொத்து கொத்தாக மடிந்த உயிர்களுக்கும் மதிப்பில்லையா? முத்தையா முரளிதரன் கேரக்டரை நல்லவனாக சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன?

முழக்கம்
தமிழினத்திற்கு ஆதரவாக இல்லாதவருக்கு தமிழகத்தில் எதற்கு ஆதரவு? அப்படியென்றால் மேடைக்கு மேடை மனிதம், மனிதாபிமானம் என்று பேசியதெல்லாம் கூட வேஷமா? தமிழகத்தில் நடந்த எத்தனையோ சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்த போதெல்லாம் பூரித்துதான் போனோம்.. ஒருகட்டத்தில் தமிழர்களின் அடையாளங்களை பாதுகாக்க வேண்டும் என்று அவர் சொன்ன கருத்திலும் நாங்கள் நெகிழ்ந்தே இருந்தோம்.

பார்க்க மாட்டோம்
இதுவரை விஜய் சேதுபதி மீதிருந்த மொத்த மரியாதையும் தூள் தூளாக போய்விட்டது.. இனி அவர் படத்தை நாங்கள் பார்க்க மாட்டோம்.. இதுதான் அவருக்கு கடைசி படமாகவும் இருக்கும்.. இன துரோகியான முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி இனபற்றாளர் நடிப்பது ஏற்கவே முடியவில்லை" என்று கொந்தளித்து விட்டனர்.

கொந்தளிப்பு
இந்நிலையில், ட்விட்டரில் ஹேஷ்டேக் ஒன்றும் ட்ரெண்டாகி வருகிறது.. தன்னை ஒரு தமிழ் உணர்வாளராக காட்டி கொள்பவர், எப்படி இதில் நடிக்க சம்மதித்தார்? உங்களுக்கு வெட்கமாக இல்லையா விஜய் சேதுபதி? என இன்று ட்விட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங்கில் உள்ளது. கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் இந்த ஹேஷ்டாக்கை ரீ-டுவீட்டும் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications