ஆரம்பமே மெகா சொதப்பல்.. களத்துக்கே போகாத விஜய்! 12 மாவட்டங்களில் ஆப்சென்டால் நண்பாஸ் அப்செட்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஜய் மேற்கொண்ட சூறாவளி பிரச்சாரப் பயணம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பாட்டாலும், சில முக்கிய மாவட்டங்களுக்கு விஜய் நேரில் செல்லாதது தற்போது தொண்டர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக சுமார் 12 மாவட்டங்களில் நேரடி ரோடு ஷோ அல்லது பொதுக்கூட்டங்கள் கூட நடத்தப்படாதது அவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய தகவல்களின் படி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, இராமநாதபுரம், நீலகிரி, பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் நேரடியாகப் பிரச்சாரம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

வடதமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் அவரது நேரடி வருகை தராதது, அந்தப் பகுதிகளில் கட்சி தொண்டர்களுக்கு ஒரு அளவிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக விஜய்
இதற்கான முக்கிய காரணமாக நேரமின்மை மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் கூறப்படுகின்றன. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுவதால், அந்த தொகுதிகளில் அதிக நேரம் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. தனது சொந்த தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் அங்கு அதிக கவனம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.
12 மாவட்ட பிரச்சாரம்
மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாட்களில் சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களில் பல தொகுதிகளை குறுகிய நேரத்தில் கவர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் செல்ல முடியாத நிலை உருவானதாக கட்சி நிர்வாகிகள் விளக்குகின்றனர். விஜய் நேரில் செல்லாத மாவட்டங்களில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹோலோகிராம் தொழில்நுட்பம்
குறிப்பாக 3D ஹோலோகிராம் தொழில்நுட்பம் மூலம் விஜய்யின் உருவம் மக்களிடம் உரையாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், பெரிய எல்.இ.டி திரைகள் மூலம் அவரது வீடியோ உரைகள் ஒளிபரப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில பகுதிகளில் ரோபோக்கள் மற்றும் எல்.இ.டி வாகனங்கள் மூலம் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசில்
குறிப்பாக விசில் சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், திரைப்படத் துறை சார்ந்த தவெக ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய மாநில நிர்வாகிகள் அந்த பகுதிகளில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்
இதற்கிடையில், சில அரசியல் கட்சிகள் விஜய் சில மாவட்டங்களுக்கு செல்லாததை விமர்சித்து வருகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள், இது தோல்வி பயத்தினால் ஏற்பட்ட முடிவு என குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் இதற்கு பதிலளித்த விஜய், நேரில் செல்ல முடியாத பகுதிகளிலும் மக்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்ததாக கூறப்படுகிறது. விஜய் 12 மாவட்டங்களுக்கு நேரடியாகச் செல்லாதது தேர்தல் களத்தில் ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.












Click it and Unblock the Notifications